தேவர் குருபூஜை: கொடநாட்டில் ஜெயலலிதா அஞ்சலி- பசும்பொன்னில் கோலாகலம்
தேவர் குருபூஜை: கொடநாட்டில் ஜெயலலிதா அஞ்சலி- பசும்பொன்னில் கோலாகலம்
கொடநாடு: முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு, கொடநாடு முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தேவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தேவர் ஜெயந்தி, குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 108வது ஜெயந்தி விழாவும், 53வது தேவர் குருபூஜையை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது
6000 போலீசார்
பசும்பொன்னில் ஏராளமான அரசியல் தலைவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்து தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 6000 போலீசார் பசுப்பொன்னில் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆள் இல்லா விமானம்
பசும்பொன்னில் மின்வாரிய அலுவலகம் அருகே தாற்காலிகமாகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வெளியூர்களிலிருந்து வந்து செல்லும் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. தேவர் நினைவிடம் அருகே 200 கார்களை ஒரே இடத்தில் நிறுத்திவைக்கும் வகையில் தாற்காலிக கார் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 28 ஆம் தேதி முதல் ஆள் இல்லா உளவு விமானம் மூலமும் பாதுகாப்பு பணி நடைபெற்று வருகிறது.
மதுரையில் அஞ்சலி
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவுக்குச் செல்லும் வழியில். அமைச்சர் செல்லூர் ராஜு, மேயர் ராஜன் செல்லப்பா, திமுக., பொருளாளர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட பல தலைவர்கள், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கொடநாட்டில் ஜெயலலிதா
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கொடநாடு முகாம் அலுவலகத்தில் முத்துராமலிங்கத்தேவர் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். கடந்த ஆண்டு போயஸ்கார்டனில் தேவர் படத்திற்கு அஞ்சலி செலுத்திய ஜெயலலிதா, இந்த ஆண்டு கொடநாட்டில் அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.