அம்மா உணவகத்தில் இருந்து ஜெயலலிதா படம் திடீரென அகற்றம்... தொண்டர்கள் அதிர்ச்சி.. பின்னணியில் யார்?
திருச்சியில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்து ஜெயலலிதாவின் படம் அகற்றப்பட்டுள்ளது.
திருச்சி: திருச்சியில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்த ஜெயலலிதாவின் படம் அகற்றப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் திடீரென அகற்றப்பட்டிருப்பது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம், அவர் வகித்த அதிமுக பொதுச்செயலாளர் பதவி அனைத்தும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரால் கைப்பற்றப்பட்டது.
ஜெயலலிதா மறைவால் இந்த ஆண்டு அதிமுக நிர்வாகிகள் சார்பில் வழங்கப்பட்ட காலண்டர்களில் சசிகலாவின் படமே இடம் பெற்றிருந்தது. சில நிர்வாகிகளின் பாக்கெட்டில் இருந்த ஜெயலலிதா படங்கள் மறைந்து சசிகலாவின் படங்களுக்கு இடமளிக்கப்பட்டிருந்தது.
ஜெயலலிதாவும் குற்றவாளிதான்
இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கெல்டி குன்ஹா வழங்கிய தீர்ப்பையே உறுதி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளிகள் என தெரிவித்தனர்.
உயிரோடு இல்லாததால் விடுவிப்பு
ஜெயலலிதா தற்போது உயிரோடு இல்லை என்பதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து சசிகலா உட்பட எஞ்சிய 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குற்றவாளி படங்களை வைக்க எதிர்ப்பு
ஜெயலலிதா குற்றவாளி என்பது அரசுத் திட்டங்களை அவரது பெயரில் அறிவிக்கவும், அரசு அலுவலகங்களில் அவரது புகைப்படங்களை வைக்கவும் எதிர்ப்பு கிளம்பியது. மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டங்களையும் நடத்தின.
ஜெயலலிதா படம் அகற்றம்
இந்நிலையில் திருச்சி அம்மா உணவகத்தில் இருந்த ஜெயலலிதாவின் புகைப்படம் திடீரென அகற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.