போலீஸ் நிலையங்களில் அவசரம் அவசரமாக அகற்றப்படும் ஜெ. படங்கள்!
தமிழக போலீஸ் நிலையங்கள், அலுவலகங்களில் வைக்கப்பட்ட ஜெயலலிதா படங்களை அகற்றி வருகின்றனர்.
சென்னை: தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்கள், டிஜிபி அலுவலகம், கமிஷனர் அலுவலகங்கள், எஸ்பி அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் இது நாள் வரை பிரதானமாக மாட்டப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படங்களை வேகமாக அகற்றி வருகிறார்களாம்.
உச்சநீதிமன்றத்தால் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. மற்ற குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் கம்பி எண்ணி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் தொடர்ந்து ஜெயலலிதாவின் படங்களே பிரதானமாக உள்ளன. அமைச்சர்கள் நடத்தும் கூட்டங்கள், கலெக்டர் கூட்டங்கள் என எல்லாவற்றிலும் ஜெயலலிதா படங்களே வைக்கப்பட்டு கூட்டம் போடுகிறார்கள்.
குற்றவாளி படம் வைக்கலாமா
நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவரின் புகைப்படத்தை இப்படி வைத்துக் கொண்டாடலாமா என்ற சர்ச்சை வெடித்துள்ளது. வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவரின் படத்தை வைக்கலாமா, பிறந்த நாளைக் கொண்டாடலாமா என்ற கேள்விகள் தமிழக அரசை தர்மசங்கடத்துக்குள்ளாக்கியுள்ளன.
போலீஸாருக்குத்தான் பெரும் சிக்கல்
இதில் காவல்துறைக்குத்தான் பெரும் சிக்கல். அதாவது காவல் துறையின் அனைத்து அலுவலகங்களிலும் ஜெயலலிதா படம் உள்ளது. காவல் நிலையத்திலேயே குற்றவாளியின் படத்தை வைத்து கெளரவப்படுத்தலாமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் தற்போது உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளதால் காவல்துறை சுதாரிக்க ஆரம்பித்துள்ளது.
படம் அகற்றம்
தற்போது மாநில டிஜிபி அலுவலகம் முதல் அனைத்து காவல்துறை அலுவலகங்களிலும் ஜெயலலிதா படத்தை எடுத்து வருகிறார்களாம். கமிஷனர், எஸ்.பி, டிஎஸ்பி என அனைத்து நிலை அதிகாரிகளின் அலுவலகங்களிலும் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படங்களை அவசரம் அவசரமாக எடுத்து வருகிறார்களாம்.
இனி அவருக்குப் பதில் இவர்
ஜெயலலிதா படத்தை எடுத்து விட்டு அவருக்குப் பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படம் வைக்கப்பட்டு வருகிறதாம். முதல்வராக இருந்த ஓ.பி.எஸ் படம் கூட இதுநாள் வரை வைக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது., இந்த நிலையில் தற்போது முதல்வராக உள்ள எடப்பாடியாரின் படங்களை வைத்து வருகின்றனர்.
சுதாரிப்பு
கோர்ட்டிலிருந்து கண்டனமோ உத்தரவோ வருவதற்கு முன்பு நாமே மாற்றி விடலாம் என்ற யோசனையில் இந்த உத்தரவை காவல்துறை அமல்படுத்தி வருகிறதாம். யாரும் இதுதொடர்பாக உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று சொல்கிறார்கள்.