ஜெ. போஸ்டரை தீயை வைத்து எரித்த கன்னட அமைப்பினர் #cauvery #kannada
ஓசூர்: தமிழக எல்லையில் ஓசூர் அருகே முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படம் தாங்கிய போஸ்டர்களை கன்னட அமைப்பினர் தீவைத்துக் கொளுத்திப் போராட்டம் நடத்தினர்.
காவிரியில் தண்ணீர் இல்லாமல் டெல்டா விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் காவிரியில் நடுவர் மன்ற தீர்ப்புப்படி தமிழகத்திற்குத் தர வேண்டிய தண்ணீரைப் பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது தமிழகம். உச்சநீதிமன்றமும் தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது.
ஆனால் கர்நாடகத்தில் கன்னட அமைப்பினர் இதை எதிர்த்துப் போராட்டங்களில் குதித்துள்ளனர். இது பல இடங்களில் வன்முறையாக மாறியுள்ளது. குறிப்பாக சில கன்னட அமைப்பினர் வன்முறையைக் கையில் எடுத்துள்ளனர்.
மைசூர், மாண்டியா, சாம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பெங்களூரிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் கர்நாடக எல்லையில், ஓசூர் அருகே உள்ள ஆனேக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கன்னட அமைப்பினர் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தின்போது முதல்வர் ஜெயலலிதாவின் படத்தினை தீயிட்டு கொளுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.