ஜெயலலிதாவின் ராசி திதி ஏகாதசி, ராசி எண் 2... ராசி கலர் பச்சையுடன், மெரூன்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ராசி எண் 2 ஆக மாறிய நிலையில் அவருக்கு ராசியான திதியாக ஏகாதசி அதாவது 11வது திதியாக (கூட்டுத்தொகை 2) அமைந்துள்ளது. பச்சை, மெரூன் கலர் புடவைகளை உடுத்துவதால் இனி மேடைகளில் இந்த கலரினையே அதிமுகவினர் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜோதிடம்,ஆன்மீகம்,எண் கணிதம் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு.அரசியல் ரீதியாக கட்சி ரீதியாக ஒவ்வொரு செயல்பாட்டையும், ஜோதிட கணித அடிப்படையில் கணக்கிட்டுத்தான் அமைத்துக் கொள்வார்.
ஜெயலலிதாவின் ராசி எண் 9 என்று கூறப்பட்ட நிலையில் அது 7 ஆக மாறியது, பின்னர் 5 என்று கூறப்பட்ட நிலையில் இப்போது 2தான் ஜெயலலிதாவின் ராசி என்கின்றனர். எனவேதான் முன்பெல்லாம் எந்த செயலையும் பஞ்சமி திதியில் ஆரம்பித்த ஜெயலலிதா இப்போது ஏகாதசி எனப்படும் 11வது திதியில் நற்காரியங்களை தொடங்க உத்தரவிடுகிறார்.
விஷ்ணுவுக்கு உகந்த ஏகாதசி
பகவான் விஷ்ணுவிற்கு உகந்த திதி ஏகாதசி. வைகுண்ட ஏகாதசி விரதம் பிரசித்தி பெற்றது. ஜெயலலிதாவும் விஷ்ணு பக்தை என்பதால் சமீப காலமாக அனைத்து செயல்களும் ஏகாதசி திதியில் தொடங்க உத்தரவிடுகிறார். கடந்த 6ம் தேதியன்று மார்கழி மாதம் தேய்பிறை ஏகாதசியன்று ஜெயலலிதா பேரவையினர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர். மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி 'உற்பத்தி ஏகாதசி' என்ற சிறப்பும் உடையது.
தை மாத ஏகாதசி நாட்கள்.
தை மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு சபலா என்று பெயர். அதாவது விருப்பம் நிறைவேறும் என்பது இதன் பொருள். நாடு கடத்தப்பட்ட மகிஷ்மதராஜனின் மகன், எதுவும் கிடைக்காததாலேயே, உண்ணாமலும், பசி, தாகத்தினால் உறங்காமல் இருந்தாலும் கூட, திருமால் அருளால் மீண்டும் அரசாட்சி பெற்ற நாள். தை மாதம், வளர்பிறை ஏகாதசிக்கு புத்ரதா (குலம் தழைக்க மகப்பேறு அருள்வது) என்று பெயர். பல வருடங்கள் புத்திரப்பேறு இன்றி வருந்திய சுகேதுமான் - சம்பா என்ற அரச தம்பதியர்க்கு குழந்தை அருளிய பெருமையுடையது.
ஜனவரி 20 தொடங்கி பிப்ரவரி 3 வரை
ஜனவரி 20 முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை விருப்ப மனுவை பெற்று விண்ணப்பிக்கலாம் என ஜெயலலிதா அறிவித்துள்ளார். 20ம் தேதியான இன்று தை மாத வளர்பிறை ஏகாதசி திதி காலை 10.50 மணிவரை உள்ளது. அதேபோல பிப்ரவரி 3ம் தேதி ஏகாதசி திதி நிறைவடைகிறது. ராசி எண் 2 என்பதால் இன்று விருப்ப மனுக்கள் விண்ணப்ப விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
விடுதலையான நாள்
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, மே, 11ல், ஜெயலலிதா விடுதலையானார்; அந்த தேதியின் கூட்டு எண் இரண்டு. இதையடுத்து, மீண்டும் எம்.எல்.ஏ.,வாக, அவர் ஆர்.கே.நகரை தேர்வு செய்தார். அந்த தொகுதியின் எண், 11.இதன் கூட்டுத் தொகை இரண்டு.
2 அடி கரும்பு
இரண்டாம் எண் ராசி என்பதால், பொங்கல் பரிசுத் தொகுப்பில், இரண்டு அடி கரும்பு வழங்கப்பட்டது. நிறைய பேருக்கு ஒரு அடி கரும்புதான் கிடைத்தது என்பது வேறு விசயம்.
ரூ. 11 ஆயிரம் கட்டணம்
அ.தி.மு.க., வில் விருப்ப மனு, விண்ணப்பக்கட்டணமாக 11 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் கூட்டுத் தொகையும் இரண்டு. கடந்த ஆண்டு ரூ. 10000தான் கட்டணம் நிர்யணம் செய்யப்பட்டிருந்தது.
சட்டசபை கூட்டத்தொடர்
இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம், ஜனவரி 20ம் தேதியான இன்று தொடங்கியுள்ளது. பிப்ரவரி 20ல், வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ள தாகவும், அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கலர் மாறிய ஜெயலலிதா
முதல்வர் ஜெயலலிதா தற்போது, பச்சை நிறப் பழக்கத்திலிருந்து சற்றே மாறி வருகிறார். இதற்கும், அவருடைய ராசிக்கும் தொடர்பு இருக்கலாம். எம்.ஜி.ஆர் பிறந்தநாளன்று மாலை அணிவிக்க வந்த போது மெரூன் கலர் உடை அணிந்து வந்திருந்தார். ஆனால் இன்றைக்கோ புதனின் நிறமான பச்சை நிற சேலை அணிந்து வந்திருந்தார்.
மாறாத புதன் ராசி
ஜெயலலிதாவிற்கு புதன் ராசி சென்டிமெண்ட் மாறவில்லை என்றே தோன்றுகிறது. புதன் ஓரையில் செயல்களை தொடங்குவதைப் போல புதன்கிழமையன்று ஜெயலலிதா பேரவையினர் பிரச்சாரத்தைத் தொடங்கினர். புதன்கிழமையான இன்று விருப்ப மனுக்கள் விற்பனை செய்யப்படுகிறது. புதன்கிழமையன்றுதான் விருப்பமனு விற்பனையும் நிறைவடைகிறது. அநேகமாக மார்ச் 20ம் தேதி வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது ஏனெனில் அன்றைக்குத்தான் மாசி மாத வளர்பிறை ஏகாதசி நாளாகும்.
வெற்றி கிடைக்கும்
மாசி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு ஜயா (நினைத்ததை அடைவதில் வெற்றி கோருவது) என்று பெயர். மால்யவான் என்ற கந்தர்வன் தெய்வ அபசாராத்தால் ஏற்பட்ட அல்லல் நீங்கிய நாளாகும். தேர்தலில் வெற்றி கிடைக்குமா? பார்க்கலாம்.