ஜெ. விடுதலை: விடாமல் சுமந்த பால்குடங்கள்… தோள் வலிக்க தூக்கிய காவடிகள் வீணாகவில்லை!
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை கர்நாடகா உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நால்வரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி குமாரசாமியின் இந்த அதிரடி தீர்ப்பினால் சாமிக்கு ஆயிரக்கணக்கில் சுமந்த பால்குடங்களும், அங்கப்பிரதட்சணமும், காவடிகளும் வீணாகவில்லை என்று அதிமுகவினர் வெற்றி முழக்கமிட்டு வருகின்றனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகால சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா. அன்றைய தினம் தமிழகமே பற்றி எரிந்தது. கடையடைப்புகளும், கல்லெறிகளும் நடத்தி தமிழக மக்களின் ஒட்டு மொத்த அதிருப்தியை சம்பாதித்தனர் அதிமுகவினர்.
சில தினங்களில் காட்சி மாறியது. உண்ணாவிரதம், கோவில்களில் வேண்டுதல்கள் என ட்ரெண்ட்டை மாற்றினர். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவிற்கு ஜாமீன்வழங்கி உத்தரவிட்டனர்.
பால் குடங்கள்
வழக்குகளில் இருந்து ஜெயலலிதா விடுதலையாகவும், மீண்டும் முதல்வராக வரவேண்டியும் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ஆயிரக்கணக்கில் பால் குடங்களை சுமந்தனர் அதிமுகவினர்.
அங்கப்பிரதட்சணம்
சாதாரண தொண்டர்கள் முதல் அமைச்சர்கள் வரை ஈர உடையோடு அங்கப்பிரதட்சணம் செய்தனர். சிலரோ மண்சோறு கூட சாப்பிட்டு தங்களின் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்.
காவடி தூக்கி
மாரியம்மனுக்கு தீச்சட்டி ஏந்துபவர்கள் ஒருபுறம் இருக்க அமைச்சர் செந்தில் பாலாஜியோ காவடி எடுத்து கலந்து கட்டி அடித்தார். இது ஊடகங்களில் கேலிப்பொருளாக மாறியது.
பறவைக்காவடியும்
மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ நடத்திய நாடகமோ மிகப்பெரியது. பலகோடி ரூபாய் செலவு செய்து பால்குடமும், பறவைக்காவடியும் எடுத்தார். போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தார்.
சத்ரு சம்ஹார யாகங்கள்
கோவில் கோவிலாக யாகம் நடத்தி, கூடவே அன்னதானம், ஆடைதானம் கொடுத்து அசத்தினர் அதிமுகவினர். கூட தீச்சட்டியும் ஏந்தினார் அமைச்சர் வளர்மதி.
முடங்கிய அரசு
அதிமுக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளிலேயே முழுமையான ஆட்சி என்று போஸ்டர் ஒட்டினர் அதிமுகவினர். எதை நினைத்து அப்படி ஒட்டினார்களோ, நான்காவது ஆண்டில் அரசு முற்றிலும் ஸ்தம்பித்து விட்டது. காரணம் ஜெயலலிதா சிறைக்குப் போனதை அடுத்து பதவி பறிக்கப்பட்டது. இதனையடுத்து முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் அறைக்கே போவதில்லை. அமைச்சர்களே அவரை முதல்வராக ஏற்றுக்கொள்ளவும் இல்லை.
கோவில் கோவிலாக
அமைச்சர்களும், எம்.எல். ஏக்களும் கடந்த 8 மாதகாலமாக கோவில் கோவிலாக ஏறி இறங்கினர். தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வேண்டுதல் பலித்தது
ஜெயலலிதா வழக்குகளில் இருந்து விடுபடவேண்டும் என்பதற்காகவே அதிமுகவினர் கோவில் கோவிலாக ஏறி இறங்கினர். ஏராளமானோர் உயிரையும் மாய்த்துக்கொண்டனர். சாமிக்கு வைத்த வேண்டுதல்களும், நேர்த்திக்கடன்களும் வீணாகவில்லை. குமாரசாமி தங்களின் குறைகளுக்கு செவிசாய்த்து விட்டார் என்று மகிழ்ச்சிப் பெருக்கில் தற்போது பட்டாசு வெடித்து வருகின்றனர் அதிமுகவினர்.