ஜெ எங்களை நீக்க காரணமே இந்த சதிகாரர்கள் செய்த சதிதான்.. தினகரன் பகீர்!
ஜெயலலிதா எங்களை நீக்க காரணமே ஓபிஎஸ், தங்கமணி மற்றும் டிஜிபி ராமானுஜம் தான் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
சென்னை: ஜெயலலிதா எங்களை நீக்க காரணமே ஓபிஎஸ், தங்கமணி மற்றும் டிஜிபி ராமானுஜம் தான் என தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல்முறையாக எம்எல்ஏவாகியுள்ள தினகரன் பங்கேற்று வருகிறார்.
நேற்று சட்டசபையில் தனது கன்னிப் பேச்சை தொடங்கினார். இந்நிலையில் இன்றும் அரசுக்கு எதிராக பேச முயன்ற அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என தெரிகிறது.
தினகரன் குற்றச்சாட்டு
இதையடுத்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த தினகரன், தனது ஆதரவாளர்கள் புடைசூழ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது சட்டசபையில் தன்னை பேச அனுமதிக்கவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
ஆட்சியை கவிழ்க்க
மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீதும் அவர் சரமாரியாக குற்றம்சாட்டினார். ஆட்சியை கவிழ்க்க அரசுக்கு எதிராக வாக்களித்தவர் ஓபிஎஸ் என்றும் அவர் சாடினார்.
முதல்வர் பதவிக்காக தியானம்
முதல்வர் பதவி இல்லை என்பதற்காக தியானம் செய்தவர் ஓபிஎஸ் என்றும், குடும்ப ஆட்சிக்கு எதிராக போராடுவதாக கூறி வரும் அவர் குடும்ப அரசியல் செய்யவில்லையா என்றும் கேள்வி எழுப்பினார். ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி, மகன் மற்றும் மாமனார் ஆகியோர் என்ன செய்கின்றனர் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
எங்களால்தான் முதல்வரானார்
எங்களின் குடும்பத்தால் தான் ஓபிஎஸ் முதல்வரானார் என்றும் நான்தான் ஓபிஎஸை ஜெயலலிதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தேன் என்றும் அவர் கூறினார். எங்கள் குடும்பம் இல்லாவிட்டால் ஓபிஎஸ் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது என்றும் தினகரன் கூறினார்.
சதி செய்த சதிக்காரர்கள்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தங்கமணிதான் சசிகலாவிடம் தன்னை துணை பொதுச்செயலாளராக பரிந்துரைத்தார் என்றும் அவர் கூறினார். மேலும் தங்களுக்கு எதிராக சதி செய்த சதிக்காரர்கள் ஓபிஎஸ், தங்கமணி மற்றும் டிஜிபி ராமானுஜம் ஆகியோர்தான் என்றும் தினகரன் குற்றம்சாட்டினார்.
ஜெ. எங்களை நீக்க காரணம்
எங்களிடம் பதவியை வாங்கிக்கொண்டு ஜெயலலிதாவிடம் எங்களை பற்றி பொய் சொல்லிவிடுவார்கள் என்றும் தினகரன் கூறினார். 10 பேர் தொடர்ந்து ஒரே பொய்யை சொல்வதால் அதனை நம்பி ஜெயலலிதாவும் எங்களை நீக்கினார் என்றும் அவர் தெரிவித்தார்.
யாருக்கோ விசுவாசத்தை காட்ட
நாங்கள் இருந்தால் தவறு செய்ய முடியாது என்பதால் எங்களுக்கு எதிராக அவர்கள் சதி செய்ததாகவும் தினகரன் தெரிவித்தார். யாருக்கோ விசுவாசத்தை காட்ட ஓ.பன்னீர்செல்வம் குடும்ப ஆட்சிக்கு எதிராக செயல்படுவதாக கூறிவருகிறார் என்றும் தினகரன் தெரிவித்தார்.
பதவிக்கொடுத்ததும் பங்காளிகள்
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவதை எதிர்த்தவர் செம்மலை என்ற அவர், இதனால்தான் கூவத்தூரில் இருந்து வெளியேறினார் என்றும் தெரிவித்தார். ஊழலாட்சி என்று பேசிய ஓபிஎஸ் பதவிக்கொடுத்ததும் பங்காளிகள் என்றாகிவிட்டனர் என்றும் சாடினார் தினகரன்.
குறுக்கு வழியில் கட்சி சின்னம்
குறுக்கு வழியில் சின்னத்தையும் கட்சியையும் பெற்றும் ஆர்கே நகரில் அவர்கள் காலியாகிவிட்டனர் என்றும் அவர் தெரிவித்தார். ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியதே துணைமுதல்வர் பதவிக்காகதான் என்றும் தினகரன் சரமாரியாக விளாசினார்.