ஜெயலலிதாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்.. ஜி.ராமகிருஷ்ணன்
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி ஜெயலலிதாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மதுரை: சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி ஜெயலலிதாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் தமிழ் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். பட்டாசு தொழில் மற்றும் அதன் தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும்.
சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிட்டு அந்த ஆலையை லாபகரமானதாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மார்க்சிஸ்ட் இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளது. நிலத்தடி நீரை பாதிக்கும் சீமை கருவேல மரங்களை அகற்ற ஹைகோர்ட் உத்தரவிட்டது வரவேற்புக்குரியது. ஆனால் குளிர்பான ஆலைக்கு ஆற்றில் தண்ணீர் எடுக்க அனுமதியளித்துள்ளது முரணானது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி ஜெயலலிதா சொத்துகளை தமிழக அரசு பறிமுதல் செய்ய வேண்டும்.முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஜெயலலிதாவின் ஆட்சியை பின்பற்றுவோம் என கூறுவது சமூகநெறிக்கு புறம்பானது என விமர்சித்துள்ளார் ஜி.ஆர்.