ஜெ. சொத்து என்ன மைசூர் பாகா.. ஆளாளுக்கு பங்கு கேட்கிறார்களே!
ஜெயலலிதாவின் சொத்தில் எனக்கும் பங்கு உண்டு என்று ஜெயலலிதாவின் சகோதரர் மைசூர் வாசுதேவன் தெரிவித்தார்.
சென்னை: ஜெயலலிதாவின் சொத்தில் எனக்கும் பங்கு உண்டு என்று ஜெயலலிதாவின் சகோதரர் மைசூர் வாசுதேவன் உரிமை கொண்டாடினார்.
ஜெயலலிதா இறந்தாலும் அவரது வாரிசு யார் என்பதில் நாளுக்கு நாள் சிக்கல்கள் நீடித்து கொண்டே இருக்கிறது. இதில் தீபக், தீபா, அமிர்தா வரிசையில் ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு புறப்பட்டுள்ளார் ஜெ.வின் மாற்றாந்தாயின் மகன் மைசூர் வாசுதேவன்.
இதுகுறித்து அவர் சன் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் எனது அப்பா ஜெயராமனுக்கு இரு மனைவிகள். அதில் முதல் மனைவியின் மகன்தான் நான். என் அம்மா இறந்தவுடன் இரண்டாவதாக சந்தியாவை அவர் திருமணம் செய்து கொண்டார்.
பொருளாதாரம் மோசம்
என்னை பராமரிக்காமல் விட்டு விட்டனர். இவர்களுக்கு ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் பிறந்தனர். ஜெயலலிதா என்னை ஏற்றுக் கொள்ளவே இல்லை. இதற்கு காரணம் சசிகலாதான். எனது பொருளாதார நிலையை சரி செய்ய எனக்கு ஜெயலலிதாவின் சொத்துகளில் பங்கு தேவைப்படுகிறது. இதற்காக சட்டப்படி அணுகியுள்ளேன்.
35 ஆயிரம் கோடி
அவர் எங்கெல்லாம் சொத்து வைத்திருக்கிறார் என்பதுகூட எனக்கு தெரியாது. ஜெயலலிதா ரூ.35 ஆயிரம் கோடியை விட்டு சென்றுள்ளார் என்று கூறுகிறார்கள். ஜெயலலிதா சாவுக்கே சசிகலாதான் காரணம் என்ற போது அந்த 35 ஆயிரம் கோடியை அவர் கூட வைத்திருக்கலாம்.
ஜெ.வின் மகள் அல்ல
ஜெயலலிதாவின் சொத்தை 4 பங்காக போட வேண்டும். அதில் எனக்கும், தீபா, தீபக், அமிர்தா ஆகிய 4 பேருக்கும் சரிசமமாக பிரித்து கொடுக்க வேண்டும். ஜெயலலிதாவின் சகோதரி சைலஷாவின் மகள் அமிர்தா.
பிறந்த குழந்தை
அவர்தான் தற்போது ஜெயலலிதாவின் வாரிசு என்று கூறிவருகிறார். ஆனால் அவர் ஜெ.வின் மகள் அல்ல. ஆனால் சோபன்பாபுவுக்கும் ஜெயலலிதாவுக்கும் பிறந்த குழந்தை உள்ளது. அது யார் என்று எனக்கு தெரியாது. ஒரு வேளை ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு வந்துவிட்டால் சொத்து முழுதும் அவருக்குதான் சேர வேண்டும் என்றார் வாசுதேவன்.