ஜெயலலிதா மரண வழக்கு: ஜெ.தோழி கீதா ஆஜராகாததால் நீதிபதி கண்டனம்
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த அவரது தோழி கீதா, நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நீதிபதி கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
சென்னை: ஜெயலலிதா மரணத்தில மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டிய அவரது தோழி கீதா, நீதிமன்றத்தில் 3 முறையும் ஆஜராகாததால் நீதிபதி கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி காய்ச்சல், நீர் சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் 75 நாள்களாக சிகிச்சை மேற்கொண்ட அவர் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை சந்திக்க சசிகலா தரப்பு யாரையும் அனுமதிக்கவில்லை. மேலும் பொதுமக்களுக்கும் ஜெயலலிதாவின் மரணம் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பின. ஜெயலலிதாவை சந்தித்தால் நோய் தொற்று ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததால் சசிகலாவை மட்டும் அனுமதித்தது ஏன் என்றும் அவருக்கு நோய் தொற்று ஏற்படாதா என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணம் இயற்கையாக நடந்தது அல்ல என்றும் சசிகலா குடும்பத்தினர் அவரை கொன்றுவிட்டனர் என்றும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அவரது தோழி கீதா எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக 2 முறை உத்தரவிட்டும் கீதா ஆஜராகவில்லை. இந்நிலையில் அந்த வழக்கு விசாரணை நீதிபதி சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போதும் கீதா ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.