ஆயிரம் இருந்தாலும், ஜெயலலிதாவின் இந்த ஆளுமை யாருக்கு வரும்?
இன்றைக்கு ஜிஎஸ்டி விவகாரம் பற்றி எரிவதால்... அது தொடர்பான ஒரு சின்ன பின்னோக்கிய நினைவு..
மறைந்த முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் கலந்துக்கொண்ட திட்டக்குழு கூட்டம் அது. கூட்டத்தில் தமிழக தேவைகளை எடுத்துக் கூறி.. நாற்பத்து ஐந்து ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யக் கேட்டார் ஜெயலலிதா. அப்போது திட்டக்குழு கமிஷன் துணை த்தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஜெவின் மறுத்துவிட்டு 22 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்வதாக கூறினார்..
கடுப்பாகி போன ஜெ கூட்டத்தில் இருந்து வெளியே வந்தார். அங்கே கூடியிருந்த பத்திரிகையாளர்கள் விபரம் கேட்க, விட்டு விளாசி விட்டார் ஜெயலலிதா.
"தமிழகத்தில் இருந்து வருடந்தோறும் 78400 கோடி ரூபாயை பல வகைகளில் மத்திய அரசுக்கு தருகிறோம். ஆனால் எங்கள் தேவைக்கு நாங்கள் இங்கே வந்து காத்திருக்கும் நிலை உள்ளது. அப்படியும் நாங்கள் கேட்கும் தொகையைத் தர மறுக்கிறார்கள்.. இது மிக முக்கிய உற்பத்தி மாநிலமான தமிழகத்தை உதாசீனப் படுத்தும் செயல்," எனக்கூறிவிட்டு விடுவிடுவென
தமிழ்நாடு இல்லத்திற்குச் சென்றுவிட்டார்.
ஆடிப்போனது மத்திய அரசு. உடனடியாக உயர் அதிகாரிகளை அனுப்பி ரூ 36000 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் இது திட்டமிட்ட செலவினங்களுக்கு மட்டுமே. திட்டமிடா உபரி / திடீர் செலவுகளுக்கு மேலும் நிதி ஒதுக்க மத்திய அரசு எப்போதும் தயாராக இருப்பதாக சொல்லி, 'மேடத்தை' சமாதானம் செய்தார்கள்.
எம்ஜிஆர் காலத்தில் நிலைமையே வேறு. அவர் கேட்பதைக் கொடுத்த மத்திய அரசுகள் இருந்த காலம் அது.
இப்படி ஆளுமை கொண்ட தலைவர்கள் வழிநடத்திய இந்த மாபெரும் இயக்கத்தின் தலைமையிலான ஆட்சி இன்று?
- இயக்குநர் சுரேஷ் காமாட்சி