ஜெ. கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் அரசியல் திருப்பம்.. அரசுடமையாக்க அரசியல் தலைவர்கள் கோரிக்கை
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் விவகாரம் தற்போது அரசியல் ரீதியான முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது.
சமீபத்தில் அந்த எஸ்டேட்டின் காவலாளி ஒருவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். கொடநாட்டு எஸ்டேட்டிலுள்ள சொத்து ஆவணங்கள், பணம், நகைகள் ஏதேனும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், மர்மங்களை தடுத்து நிறுத்த, கொடநாடு எஸ்டேட்டை அரசுடமையாக்க வேண்டும் என கூறியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.
இன்று ஜி. ராமகிருஷ்ணன் மதுரையில் அளித்த பேட்டியின்போது, கொடநாடு எஸ்டேட்டில் நடந்து வரும் கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக முழு விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கைவிடுத்தார். மேலும் கொடநாடு எஸ்டேட்டை அரசுடைமையாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதேபோன்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சியின் தமிழ்மாநில தலைவர் திருநாவுக்கரசராலும் முன் வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா நடிகையாகவும்,, முதல்வராகவும் இருந்த நேரத்தில் அதிகப்படியாக சம்பாதித்துள்ளதால் அவரது சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட வேண்டும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.