திடீர், திடீரென கடைசி நேரத்தில் நிகழ்ச்சிகளை ரத்து செய்யும் ஜெ.! பின்னணி மர்மம் என்ன?
சென்னை: எம்.எல்.ஏ பதவியேற்பு முதல், இஃப்தார் வரை பல்வேறு நிகழ்ச்சிகளை கடைசி நேரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்துவருவது மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில், ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றார்.
பதவியேற்பு விழா ஒத்திவைப்பு
இதையடுத்து அன்றே ஜெயலலிதா எம்.எல்.ஏவாக பதவியேற்பார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், ஜெயலலிதாவின் பதவியேற்பு நிகழ்ச்சி தேதி குறிப்பிடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இஃப்தார்
அதேபோல, அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று மாலை நடந்தது. அதில் ஜெயலலிதா பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. போயஸ் கார்டன் முதல் நந்தம்பாக்கம் வர்த்தக மையம் வரை பல கிலோ மீட்டர் தூரத்துக்கு போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
பன்னீர்செல்வம் பங்கேற்பு
ஆனால், கடைசி நேரத்தில் ஜெயலலிதாவுக்கு பதிலாக அமைச்சர் பன்னீர்செல்வம் அந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நடத்திக்கொடுத்தார். ஜெயலலிதாவின் வாழ்த்து செய்தியை வாசித்தார் பன்னீர்செல்வம். இதுமட்டுமல்ல, அதானி நிறுவனத்துடனான சோலார் மின்சார தயாரிப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோவுக்கும் வரவில்லை
முன்னதாக, திங்கள்கிழமை நடைபெற்ற சென்னை மெட்ரோ ரயில் திறப்பு விழாவுக்கும், நேரில் வராமல் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கொடியசைத்து தொடக்கி வைத்தார் ஜெயலலிதா. ஆர்.கே.நகரில் வேட்புமனு தாக்கல் செய்யவும், பிரசாரத்திற்காகவும் வெளியே வந்தார் ஜெயலலிதா. ஆனால் ஜெயா டிவி தவிர பிற மீடியாக்களையும், போட்டோகிராபர்களையும் பக்கத்தில் நெருங்கவிடவில்லை.
விடுதலைக்கு பிறகு இப்படித்தான்
தமிழக முதல்வர் சற்று ஒதுங்கியே இருப்பதும், நிகழ்ச்சிகளை கடைசி நேரத்தில் ரத்து செய்வதும் மர்மமாக உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை, கர்நாடக ஹைகோர்ட் விடுதலை செய்த பிறகு, மீண்டும் முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா, அந்த நிகழ்ச்சியிலும் மிகவும் சோர்வுடனே காணப்பட்டார். இதுகுறித்து செய்தியை நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ளோம். தேசிய கீதத்தின் நீளம் குறைக்கப்பட்டது, அமைச்சர்கள் குரூப்பாக பதவி பிரமாணம் செய்தனர். மொத்தத்தில், குறுகிய நேரத்தில் நடந்து முடிந்தது பதவியேற்பு விழா.
உடல்நலக்குறைவு
அடுத்தடுத்த இதுபோன்ற நிகழ்வுகளால், ஜெயலலிதா உடல் நிலை எப்படியுள்ளது என்ற கவலை அதிமுக வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில், பன்னீர்செல்வம், அதிகாரப்பூர்வமாகவே இதை ஒப்புக்கொண்டார். ஜெயலலிதாவுக்கு உடல் நிலை சரியில்லை என்றும் எனவே அவர் வரவில்லை என்றும் கூறினார். ஆனால், தொடர்ச்சியாக ஜெயலலிதா சோர்வாக காணப்படும் அளவுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.