மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா... பரபரப்பான மருத்துவ அறிக்கை... பிளாஷ்பேக் 2017
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டதாக பரபரப்பான அறிக்கை வெளியானது.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டதாக உண்மையான மருத்துவ அறிக்கையை தனியார் தொலைகாட்சி வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடு காரணமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டதாக அப்பல்லோ அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் டிசம்பர் 4-ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்துவிட்டார்.
தனியார் தொலைகாட்சி வெளியீடு
காய்ச்சல், நீர் சத்து குறைபாடு என்று கூறிய அப்பல்லோ மருத்துவமனையின் உண்மையான அறிக்கையை தனியார் தொலைகாட்சி சேனல் ஒன்று கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியிட்டது. அதில் கிடைத்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ம்ம்...ஆ... என்று தெரிவித்த ஜெ.
ஒவ்வொரு நோயாளியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது அவர்களின் நிலை, ரத்த அழுத்தம், ஆக்ஸிஜன் அளவு, சர்க்கரையின் அளவு ஆகியவற்றை சோதனை செய்வது வழக்கம். அதுபோல் ஜெயலலிதாவுக்கும் நிரப்பப்பட்ட அறிக்கையில் அவர் மயக்க நிலையிலேயே அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அரை மயக்க நிலையில் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் ம்ம்..ஆ என்று சொல்லக் கூடிய வகையில் தான் இருந்திருக்கிறார்.
சர்க்கரையின் அளவு
நிமோனியா காய்ச்சல், ரத்த அழுத்தம், தைராய்டு பிரச்சனையும் இருந்துள்ளது. ரத்த அழுத்தம் 120/80-க்கு பதிலாக 140/70 ஆக இருந்துள்ளது. அதே போல், 120 மி.கிராமாக இருக்க வேண்டிய சர்க்கரை அளவு அதிகமாக உயர்ந்து 508 மி.கிராம் வரை இருந்துள்ளது.
சுவாசிக்க கடினம்
சுவாசிக்கும் ஆக்ஸிஜன் அளவு 100 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால் ஜெயலலிதாவின் ஆக்ஸிஜன் அளவோ 48 சதவீதம் மட்டுமே இருந்தது. இதனால் அவரால் எளிதாக சுவாசிக்க முடியவில்லை. குறிப்பாக உடலில் காயங்கள், புண்கள் எங்கும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.