ஜெயலலிதா வாரிசு நான்தான்.. சான்று கேட்டு தாசில்தாரிடம் தீபக் விண்ணப்பம்!
மறைந்த ஜெயலலிதாவின் வாரிசான தன்னை அறிவிக்க சான்று கோரி தீபக் விண்ணப்பம் செய்துள்ளார்.
சென்னை :ஜெயலலிதாவின் வாரிசாக தன்னை அறிவிக்க வேண்டும் என்று கோரி அவரது அண்ணன் மகன் தீபக் வட்டாட்சியரிடம் வாரிசு சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
இந்திய அரசியலில் தனி இடத்தை பெற்ற பெண் அரசியல்வாதி என்ற பெருமையைப் பெற்றவர் ஜெயலலிதா. டிசம்பர் 5ம் தேதி 2016ல் அவர் மரணம் முதல் கட்சியை யார் நிர்வகிப்பது, சொத்துகளுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன. கட்சிக்கு உரிமை கொண்டாடி சசிகலா தரப்பும், முதல்வர் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையம் நீதிமன்றம் என்று முட்டிமோதி வருகின்றன.
இந்நிலையில் தன்னை ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்குமாறு சென்னை கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கோரிக்கை விடுத்துள்ளார். ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு உரிமை கோரும் விதமாக வாரிசு சான்று கேட்டு தீபக் விண்ணப்பம் அளித்துள்ளதாக தெரிகிறது.
ஆனால் இந்த கோரிக்கையை வட்டாட்சியர் மறுத்துள்ளதோடு, நீதிமன்றத்தை நாடி இந்த விவகாரத்தில் தீர்வு கண்டு கொள்ளும்படி வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே தீபக் வாரிசு சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளார், அவரது சகோதரியான தீபாவும் வாரிசு சான்று கேட்டு விண்ணப்பிப்பார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.