ஜெ. பெயரில் உள்ள போயஸ்கார்டன் வீடு எங்களுக்கே!... உரிமை கோரி கோர்ட் படியேற தீபக் திட்டம்
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீடு எங்களுக்கே சொந்தம் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியுள்ளார்.
சென்னை : ஜெயலலிதா பெயரில் உள்ள சொத்துகள் அவரது ரத்த வழி சொந்தங்களான தங்களுக்கே சொந்தம் என்று தெரிவித்துள்ள ஜெ.வின் அண்ணன் மகன் தீபக் விரைவில் இது குறித்து சட்டஉதவியை நாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கட்சி என்னவாகும் என்பதற்கான கேள்வியாகத் தான் தற்போது அதிமுக ஓ.பிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்துகிடக்கிறது. அடுத்தபடியாக ஜெயலலிதா மரணம் எழுப்பும் மற்றொரு கேள்வி ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு யார் உரிமை கோருவார்கள் என்பதாகவே உள்ளது.
சினிமாவில் 16 வயதில் நடிக்கத் துவங்கி, 22 வயதில் வீடு கட்டியவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா. சென்னை போயஸ் கார்டன் என்றாலே ஜெயலலிதாவின் பிரம்மாண்ட இல்லம் வேதா நிலையம் நினைவுக்கு வருவதை யாராலும தடுக்க முடியாது. 1972ல் 24 ஆயிரம் சதுர அடியில் ஒன்றரை லட்சத்திற்கு வாங்கி கட்டப்பட்ட வேதா இல்லத்தின் தற்போதைய மதிப்பு 90 கோடி என கணிக்கப்படுகிறது. ஜெ.வின் தாயார் மறைவிற்கு பிறகு இந்த இல்லத்தில் தனது தோழி சசிகலாவுடன் ஜெயலலிதா வசித்து வந்தார்.
ஜெ. சொத்துவிவரம்
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட போது ஜெயலலிதா தாக்கல் செய்த சொத்து மொத்த சொத்துமதிப்பு 118 கோடியே 59 லட்சம் ரூபாய் என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார். 300க்கும் மேற்பட்ட சொத்துகள் ஜெயலலிதா பெயரில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜெ. பெயரிலான சொத்துக்கு மட்டும் உரிமை
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் போயஸ் இல்லத்தை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் அல்லது மகள் உரிமை கோரலாம் அது சட்டப்படி செல்லுபடியாகும் என்று சட்டவல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். முதலில் ஜெயலலிதாவின் அம்மா பெயரில் இருந்த போயஸ் வீடு ஜெயலலிதா பெயரில் மட்டும் இருப்பதால் அவரது ரத்த உறவுகளான தீபக் மற்றும் தீபாவிற்கு உரிமை உள்ளது. இந்த சொத்துக்களை இவர்கள் கோரலாம் என்று கூறப்பட்டது.
போயஸ் வீடு எங்களுக்கே
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள தீபக் தனது அத்தையின் பெயரில் உள்ள 9 சொத்துகள் மீது உரிமை கோரி விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சென்னையில் உள்ள போயஸ் கார்டன் வீடு, செயின்ட் மேரீஸ்ரோட்டில் உள்ள இடம், வணிக வளாகம் உள்ளிட்ட 6 இடங்களும், ஐதராபாத்தில் உள்ள 3 இடங்களும் ஜெயலலிதாவின் பெயரில் உள்ளதால் இதற்கு உரிமை கோரி வழக்கு தொடர உள்ளதாக தீபக் கூறியுள்ளார்.
திடீர் மாற்றம்
சசிகலா குடும்பத்தோடு ஒற்றமையாக இருந்த தீபக், அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். தொடர்ந்து அத்தைக்குப் பிறகு சசிகலா தான் எல்லாம் என்று கூறி வந்த தீபக், சசி சிறைக்கு சென்றதும் தினகரனை பொதுச்செயலாளராக ஏற்க முடியாது ஓ.பன்னீர்செல்வம் தான் எல்லாம் என்று கூறியிருந்தார். தொடக்கம் முதலே சசிகலா குடும்பத்திற்கு எதிராக நின்ற தீபாவையும் தீபக் விமர்சித்தார், இந்நிலையில் சொத்துக்கு உரிமை கொண்டாட நீதிமன்ற படியேற உள்ளதாக அவர் கூறியிருப்பது என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.