67,000 லட்டுகள் விநியோகித்து குத்தாட்டம் போட்டு அதிமுக மகளிர் அணி கொண்டாட்டம்!
சென்னை: ஜெயலலிதா மீண்டும் முதல்வராகவுள்ளதைத் தொடர்ந்து அதிமுகவினர் ஏதோ திருவிழா போல தமிழகம் முழுக்கக் கொண்டாடி வருகின்றனர். சென்னை நகரமே ஜே ஜே என்று காணப்படுகிறது.
இன்று காலை நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஜெயலலிதாவை சட்டமன்றக் கட்சித் தலைவராக அந்தக் கட்சியின் எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர். இதையடுத்து அதிமுகவினரின் கொண்டாட்டங்கள் ஆரம்பித்து விட்டன.
ஜெயலலிதா வீடு உள்ள போயஸ் கார்டன் பகுதி, கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, நந்தனம் தேவர் சிலை, அண்ணா சாலை, எம்.ஜி.ஆர். சிலை, அண்ணா சிலை, ஸ்பென்சர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் அதிமுகவினர் கொண்டாட்டங்களில் குதித்தனர்.
மறுபக்கம் அதிமுக மகளிர் அணியினர் 67,000 லட்டுக்களை எடுத்துக் கொண்டு சாலையில் போவோர் வருவோருக்குக் கொடுத்து கொண்டாடினர். பலர் குத்தாட்டமும் போடத் தவறவில்லை.
தாரை தப்பட்டை முழங்க நடநம், ஆட்டம், பாட்டம், அம்மா வாழ்க கோஷத்துடன் அதிமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆனால் இவர்களின் கொண்டாட்டங்களில் சென்னை நகரம் சிக்கி பெரும் போக்குவரத்து நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.