தீபக் எபெக்ட்... தீபா வீடு முன்பு மீண்டும் திரண்ட ஆதரவாளர்கள்! அதிமுக தலைமையை ஏற்க வலியுறுத்தல்!
ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கலகக் குரல் எழுப்பியுள்ள நிலையில் தீபா வீடு முன்பு பெரும் எண்ணிக்கையில் அவரது ஆதரவாளர்கள் திரண்டு அதிமுக தலைமையை ஏற்க வலியுறுத்தினர்.
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் கூடி கட்சியின் தலைமைப் பொறுப்பை தீபா ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக இன்று டிடிவி தினகரன் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு ஓ. பன்னீர்செல்வத்துக்கும், சகோதரி தீபாவுக்கும் ஆதரவாக செயல்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த அதிமுக தொண்டர்கள், திநகரில் உள்ள தீபாவின் வீடு முன்பு கூடினர். அப்போது கட்சிக்கும், ஆட்சிக்கும் தீபா தலைமை பொறுப்பேற்க வேண்டும். சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்தை தமிழக மக்கள் விரும்பவில்லை என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.
மேலும் தீபா என்ன கூறினாலும் அவரது வார்த்தைக்கு நாங்கள் கட்டுப்படுவோம். தீபாவுடன் ஓ. பன்னீர்செல்வம் இணைந்து செயல்பட வேண்டும். தீபக், ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தது மகிழ்ச்சிதான் என்றாலும் அவர் சசிகலாவுக்கும் ஆதரவு தெரிவிக்கிறாரே எனவும் ஆதங்கப்பட்டனர்.
ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை தொடர்ந்து தனது சொந்த ஊரான தேனியில் இருந்து சூறாவளிச் சுற்றுப்பயணத்தை ஓ. பன்னீர்செல்வம் நாளை தொடங்கவுள்ளார். இதற்கான பிரசார வாகனம் தயார் நிலையில் உள்ளது.
இதனிடையே புதிய பேரவையை நாளை தொடங்கவுள்ளதாகவும், அதற்கான கொடியை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தீபா தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சி நாளை தீபாவின் வீட்டில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.