இதோ அசல் ஆவணங்கள்.. ஹைகோர்ட்டில் தாக்கல் செய்தார் "ஜெ. மகன்" கிருஷ்ணமூர்த்தி!
ஜெயலலிதாவுக்கும், சோபன் பாபுவுக்கும் பிறந்த மகன் தான்தான் என்று கூறி வரும் ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி தற்போது அதற்கான உண்மை ஆவணங்களை சென்னை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்தார்.
சென்னை : ஜெயலலிதாவின் மகன் தான்தான் என்று அறிவிக்கக் கோரி வழக்கு தொடுத்த ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி இன்று அதற்கான உண்மை ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி நீர் சத்துக் குறைபாடு, காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தொண்டர்கள் அப்பல்லோ வாசலில் காத்து கிடந்தனர்.
75 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அதிகபட்ச சிகிச்சைகள் அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
எதிர்க்கட்சிகளே பாராட்டிய ஜெ.
நல் ஆளுமை, பன்முகத்திறமை, திறமையான நிர்வாகம் ஆகியவற்றை கொண்ட ஜெயலலிதாவை இழந்ததால் நாட்டு மக்கள் மட்டுமல்ல அண்டைய மாநில தலைவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் அவர் திறமைசாலி என எதிர்க்கட்சிகளே பாராட்டின.
மரணத்தில் மர்மம்
இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக தொடர் பரபரப்பு உள்ளது. சசிகலா மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதிமுகவின் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பி.எச். பாண்டியன், ஜெயலலிதாவை அவரது வீட்டிலிருந்து யாரோ கீழே தள்ளிவிட்டதாகவும், சிபிஐ விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளியே வரும் என்றும் தெரிவித்திருந்தார்.
யாரும் நம்பவில்லை
ஜெயலலிதாவின் தோழியான கீதாவும் இதேபோல் அவர் கொல்லப்பட்டு விட்டார் என்று கூறிவந்தார். மக்களின் சந்தேகத்தை தீர்க்க அப்பல்லோவும், எய்ம்ஸ் மருத்துவமனையும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறிக்கைகளை வெளியிட்டும் யாரும் நம்பவில்லை.
திடீர் திருப்பம்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழகமே குழப்பத்தில் உளள நிலையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தமிழக தலைமை செயலாளருக்கு ஒரு புகார் மனுவை அனுப்பினார்.
தான்தான் ஜெ.வின் மகன்
அதில், ஜெயலலிதாவுக்கும், சோபன் பாபுவுக்கும் பிறந்த மகன் நான்தான். அவரது உண்மையான வாரிசு நான்தான். அவரது சொத்துகள் எனக்கு மட்டுமே சொந்தம். ஜெயலலிதா இறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்னர், அதாவது கடந்த ஆண்டு 4 நாள்கள் அவருடன் போயஸ் தோட்டத்தில் தங்கியிருந்தேன்.
ஜெ.வுக்கும் சசிக்கும் வாக்குவாதம்
ஜெயலலிதா என்னை அவரது மகனாக இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று எண்ணியிருந்தார். இதை எப்படியோ அறிந்து கொண்ட சசிகலா ஜெயலலிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது எனது அம்மா ஜெயலலிதாவை சசிகலா மாடியில் இருந்து தள்ளிவிட்டார் என்று பரபரப்பு புகாரை தெரிவித்திருந்தார்.
ஹைகோர்ட்டில் வழக்கு
தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய புகாரை தொடர்ந்து சென்னை ஹைகோர்ட்டில் கிருஷ்ணமூர்த்தி வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்து நீதிபதி உண்மையான ஆவணங்கள் தாக்கல் செய்ய கிருஷ்ணமூர்த்திக்கு நேற்று உத்தரவிட்டார்.
இன்று தாக்கல்
அதன்படி உண்மையான ஆவணங்களை சென்னை ஹைகோர்ட்டில் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்தார். பதிவுத்துறை மூலம் காவல் ஆணையருக்கு அனுப்பி ஆவணங்கள் குறித்து விசாரிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.