ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா வாசலில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகள் நள்ளிரவில் மாயம்
சென்னை: தேர்தலில் பணம் பட்டுவாடா செய்ய ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவுக்கு லாரிகளில் பணம் கொண்டுவரப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் ஆணையம் இங்கு சோதனை நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகார் அளிக்கவே சிறுதாவூர் பங்களாவில் நிறுத்தப்பட்டு இருந்த கன்ட்டெய்னர் லாரிகள் இரவோடு இரவாக மாயமாகி விட்டன.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே 16ம் தேதி நடைபெற உள்ளது. இதில், ஆளுங்கட்சியான அதிமுக, வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் வரை பணம் கொடுத்து ஓட்டு வாங்க திட்டமிட்டுள்ளதாக பலவேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த சூழலில், சென்னை அடுத்த பழைய மாமல்லபுரம் அருகே சிறுதாவூரில் ஜெயலலிதா தங்கும் பங்களாவில் அதிகளவில் கன்டெய்னர் லாரிகளும் பாதுகாப்புக்கு போலீசாரும் நிறுத்தப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறுதாவூர் பங்களாவில் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் கன்டெய்னர் லாரிகளும், தார் பாயால் மூடப்பட்ட லோடு வேன்களும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடிக்கடி வந்து செல்வதாக புகார் எழுந்தது. இதை அறிந்ததும் அனைத்து செய்தியாளர்களும் அங்கு திரண்டனர். அங்கு வழக்கத்துக்கு மாறாக, அதிகளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வைகோ புகார்
சிறுதாவூர் பங்களாவுக்குள் சந்தேகத்தை உண்டாக்கும் வகையில் கன்ட்டெய்னர் லாரிகள் சென்றன என்றும் அதில் கோடிக்கணக்கான ரூபாய் பதுக்கி எடுத்துச் செல்லப்பட்டது என்றும் எனவே அது குறித்து உரிய ஆய்வு செய்யவேண்டும் என்றும் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறியிருந்தார். இந்த விஷயம் தமிழகம் முழுக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆளும் கட்சிக்கு நெருக்கடி
இது தொடர்பாக,வைகோ உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் தங்களின் பிரசார கூட்டங்களில் கடுமையாகக் குற்றம் சாட்டிப் பேசி வந்தனர்.ஊடகங்களிலும் இந்த விவகாரம் வெளியாகியிருந்தது. இது அதிமுக தரப்பை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது என்று கூறப்படுகிறது.
போலீஸ் பாதுகாப்பு
மேலும் இந்த பங்களாவை ஒட்டியுள்ள தனியாருக்கு சொந்தமான பண்ணை வீடு மனை பிரிவில் 20க்கு மேற்பட்ட தெருக்கள் உள்ளன. அங்கு, ஒவ்வொரு தெருவிலும் தலா ஒரு போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். முதல்வர் ஜெயலலிதா தங்கும் பங்களா வளாகத்தில் போலீசார் தங்குவதற்கான, குடியிருப்பு உள்ளது.
இடம் மாறிய லாரிகள்
இந்த குடியிருப்பை ஒட்டி 10க்கு மேற்பட்ட கன்டெய்னர்களை ஏற்றி செல்லும் மினி லாரிகளும், அவற்றை ஏற்றி, இறக்க பயன்படுத்தும் கிரேனும் நிறுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து பரபரப்பான தகவல்கள் வெளியானதால் நேற்றிரவு அனைத்து லாரிகளும் இடம் மாற்றப்பட்டன.
போலீசார் குவிப்பு
இந்த சம்பவத்தை எப்படி வீடியோ எடுத்தார்கள், படம் எப்படி வெளியானது என சரமாரி கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து, அந்த பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தனியாக வந்த ராஜேந்திரன்
இந்நிலையில், காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், நேற்றிரவு 10 மணியளவில், தனது காரில் இந்த பங்களாவுக்கு வந்து சென்றது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஏன், எதற்காக வந்தார், தனிமையில் வந்து செல்ல வேண்டிய அவசியம் என்ன என அடுக்கடுக்காக பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது என்கின்றனர் சிறுதாவூர் பகுதிவாசிகள்!!