கட்சியை விட்டு இவங்களை நீக்கிட்டோம்... யாரும் பேசக்கூடாது...: ஜெ., அறிவிப்பு
சென்னை: திருப்பூர், கோவை, மதுரை, அரியலூர், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சிலரை கட்சியை விட்டு நீக்கி உத்தரவிட்டுள்ளார் பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருப்பூர் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடசாமி, கோவை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சால்ட் வெள்ளிங்கிரி, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல், சேதுராமன், மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மணி ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
அதிமுகவினர் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் சீட் கிடைக்காத அதிமுக நிர்வாகிகள் பலரும் இப்போது போட்டியிடும் வேட்பாளருக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்ற புகார் எழுந்தது. இதனையடுத்து வேட்பாளருக்கு ஒத்துழைப்பு கொடுக்காத பல நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி வருகிறார் ஜெயலலிதா. சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிர்வாகிகள் நீக்கப்படுவதால் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.