சசிகலா ராஜதுரோகம் செய்துவிட்டதாக ஜெயலலிதா கூறினார்: விசாரணை கமிஷனில் மருது அழகுராஜ் பரபர வாக்குமூலம்
சசிகலா துரோகம் செய்துவிட்டதாக ஜெயலலிதா கூறினார் என நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழ் ஆசிரியர் மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: சசிகலா துரோகம் செய்துவிட்டதாக ஜெயலலிதா கூறினார் என நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழ் ஆசிரியர் மருது அழகுராஜ் விசாரணை கமிஷனில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் அப்பல்லோ மருத்துவர்கள் உட்பட பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் விசாரணை கமிஷனில் முன்னாள் நமது எம்ஜிஆர் பத்திரிக்கையின் ஆசிரியரும் தற்போது நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழின் ஆசிரியருமான மருது அழகுராஜ் நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.
ஜெ.வுக்கு உரை எழுதி தரும்
அப்போது விசாரணை கமிஷனில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, என்னை ஜெயலலிதாவிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தியது சசிகலாவின் உறவினர் ராவணன்தான். நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் வேலை பார்த்த நான், ஜெயலலிதாவுக்கு உரை எழுதி தரும் பணியையும் மேற்கொண்டேன்.
ராஜதுரோகம் புரிந்தவர்கள்
2011-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் சதி செய்கிறார்கள் என்று கூறி அவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி விட்டு சசிகலாவை போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதா வெளியேற்றினார். அந்த சமயத்தில் ஜெயலலிதா என்னிடம், ‘சசிகலா உள்ளிட்டோரை நீக்கி உள்ளேன். இவர்கள் எல்லாம் ராஜ துரோகம் புரிந்தவர்கள். ராவணன் பெயரும் அந்த பட்டியலில் உள்ளது.
பணியாற்ற உத்தரவு
இதில் மாற்றுக்கருத்து ஏதேனும் இருந்தால் நீங்களும் வெளியே சென்று விடலாம்' என்று கூறினார். அப்போது நான், ‘உங்களுடன் இருக்கவே பிரியப்படுகிறேன்' என்றேன். சசிகலா போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட போது, ஜெயலலிதா தனது நம்பிக்கைக்கு பாத்திரமான பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ்பாண்டியன் போயஸ் கார்டன் பணிகளை மேற்கொள்வார் என்றும், அவருடன் இணைந்து பணியாற்றுமாறும் எனக்கு உத்தரவு பிறப்பித்தார்.
ஜெ. உடல்நிலை பாதிப்பு
இந்தநிலையில் 3 மாதங்கள் கழித்து சசிகலா மீண்டும் போயஸ் கார்டனில் அனுமதிக்கப்பட்டார். மற்றவர்கள் யாரையும் ஜெயலலிதா இறக்கும்வரை சேர்த்துக்கொள்ளவில்லை. ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டது தெரிந்தும் போயஸ் கார்டனில் ஆம்புலன்சை தயார் நிலையில் வைத்திருக்க எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
சுற்றிஇருந்தவர்கள் குற்றம்
2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி இரவு 7.45 மணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவை இரவு 10.20 மணிக்கு தான் ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். போயஸ்கார்டனில் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்காதது யாருடைய குற்றம்?. ஜெயலலிதாவை சுற்றி இருந்தவர்களின் குற்றம்தானே.
அப்பல்லோ நிர்வாகம் உடந்தை
ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள் அவரை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என்பது தான் உண்மை. ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்றெல்லாம் மருத்துவமனையில் கூடியிருந்த சிலர் பொய் சொன்னார்கள். இதை ஏன் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மறுக்கவில்லை. அப்படியென்றால், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் உடந்தை என்று தானே எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு மருதுஅழகுராஜ் தெரிவித்துள்ளார்.