விழாக்கோலம் பூண்ட ஜெ. சமாதி.. பிரிந்த இலைகள் இணைகின்றன.. ஈபிஎஸ், ஓபிஸ் வருகை!
ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகி வரும் நிலையில் ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் தனித்தனியே நடைபெற்று வரும் நிலையில் ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டது.
ஓ.பன்னீர் செல்வமும்,எடப்பாடி பழனிச்சாமியும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வருகை தருவதால் சமாதிக்குப் புதுப் பொலிவு கிடைத்தது.
அதிமுகவின் ஒபிஎஸ், ஈபிஎஸ் அணிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் தனித்தனியே ஆலோசித்து வருகின்றனர். பிளவுபட்டுள்ள இரு அணிகளும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகி வருகின்றன.
2 முக்கிய அறிவிப்பு
ஓ.பன்னீர் செல்வம் அணியினர் முன்வைத்த முக்கிய கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி அது குறித்த முக்கிய அறிவிப்பு இரண்டை வெளியிட்டார்.
என்னென்ன
ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்த விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றும், ஜெயலலிதா வாழ்ந்த வீட்டினை நினைவில்லமாக்குவோம் என்றும் அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
ஓபிஎஸ் தீவிர ஆலோசநை
இது குறித்து ஓ.பன்னீர் செல்வம் அணி தனது நிர்வாகிகளுடன் இன்று கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதேபோல முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தனது அமைச்சரவை சகாக்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
ஜெ. சமாதி அலங்காரம்
இந்த சூழ்நிலையில் ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இரு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று ஜெயலலிதா நினைவிடத்திற்கு வர வாய்ப்புள்ளதாகவும், அணிகளின் இணைப்பு ஜெயலலிதா நினைவிடத்தில் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.
சமாதி முன்பு இணைப்பு
டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்த ஜெயலலிதா 6ஆம் தேதியன்று எம்ஜிஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டார். அது முதல் அதிமுகவினர் முக்கிய அறிவிப்புகளை ஜெயலலிதா சமாதி முன்பாக வெளியிடுகின்றனர். இன்றைய தினம், ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும், இரு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சமாதிக்கு வருகை தர உள்ளனர்.