காலம்தான் எத்தனை விசித்திரமானது.. இரு தோழிகளின் கதை இது!
ஜெயலலிதாவின் மிக நெருங்கிய தோழி சசிலா மட்டுமே.
சென்னை: காலம்தான் எவ்வளவு விசித்திரமானது!
தீவிர திமுக குடும்பத்தின் பின்னணியில் இருந்த காரணத்தினால் கருணாநிதியின் தலைமையில் தனக்கு திருமணம் நடந்தாலும், ஜெயலலிதாவுடன் இப்படி ஒன்றிணைந்து போகும் உறவு கிடைக்கும் என்பதை சசிகலா உட்பட யாருமே நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
ஜெயலலிதா பள்ளியில் படித்தபோதும் சரி, திரைத்துறையில் ஏராளமானோரிடம் பழகியபோதும் சரி, அரசியலிலும் சரி, தோழி என்றால் அது சசிகலா மட்டுமே. பள்ளி, சினிமா, அரசியல் என எதிலுமே சம்பந்தம் இல்லாமல் சசிகலாவின் நட்பு ஜெயலலிதாவுக்கு கிடைத்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான்.
சாதாரணமாக தொடங்கிய இந்த நட்புதான் அது. சந்திக்கும் நேரத்தில் ஒரு மெல்லிய புன்னகை வீசத் தோன்றும். இந்த அளவுக்குத்தான் அந்த நட்பு இருந்தது. ஆனால் மெல்ல மெல்ல ஆழமாக வேரூன்ற ஆரம்பித்தற்கு காரணம் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையின் நிராதரவற்ற நிலை என்றுகூட சொல்லலாம். அதனால் நம்பிக்கைக்குரியவர் என்ற ஸ்தானம் மிக எளிதாகவும், விரைவாகவும் சசிகலாவுக்கு வந்து ஒட்டிக் கொண்டது.
கார்டனில் நுழைந்தார்
இது எப்போது வெளிப்பட்டது தெரியுமா? எம்ஜிஆர் மறைந்தபோது, ஜெயலலிதாவை அவரது தலைமாட்டிலேயே நிறுத்தி வைத்ததுடன், அவருக்கு தக்க பாதுகாப்பாக தம்முடைய ஆட்களையும் நிற்க வைத்து உதவி புரிந்தது சசிகலாதான். இந்த நிகழ்வுக்கு பின்னரே ஜெயலலிதா வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தார் சசிகலா. அந்த நேரத்தில் ரத்தக்களறியாக கிடந்த அரசியல் வெறியாட்டத்தில் துரத்தப்பட்ட ஜெயலலிதாவை பாதுகாத்து அடைக்கலம் கொடுத்தது சசிகலாதான்.
தாங்கி பிடித்தார் சசிலா
இதற்காக தன் வாழ்க்கையையே பணயம் வைத்தார் சசிகலா. தன் கணவனையே நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்தார். அவருடன் பேசுவதையும் நிறுத்தி கொண்டார் சசிகலா.அதேநேரத்தில் ஜெயலலிதா குடும்பத்தினர் அவருடன் சேர்ந்துவிடக்கூடாது என்பதிலும் ஒரு கண் வைத்தே இருந்தார் சசிகலா. அரசியல் உள்ளிட்ட பலவித பிரச்சனைகள் ஜெயலலிதாவை சூழ்ந்திருந்தது. பல இக்கட்டான, குழப்பமான, தர்மசங்கடமான, நேரங்களில் எல்லாம் தன் ஜெயலலிதா என்ற அதிமேதாவி தோழி சாய்ந்துவிடக்கூடாது என தாங்கியே பிடித்துள்ளார் சசிகலா.
வலம்புரிஜானின் வார்த்தை
இங்கு மறைந்த எழுத்தாளர் வலம்புரிஜான் பற்றி சொல்லியாக வேண்டும். வலம்புரிஜான் அற்புதமான சிந்தனையாளர். அபார அறிவாற்றல் மிக்கவர், துணிச்சல் மிக்கவர். அவர் சசிகலாவை பற்றி 20 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி கூறினார், "மொகலாய சாம்ராஜ்ஜியத்தில் மட்டும் சசிகலா இருந்திருந்தால், வெள்ளைக்காரனே இந்தியாவுக்குள் காலடி வைத்திருக்க முடியாது" என்றார்.
நிழல் முதல்வர்?
சில காலம் இந்த நட்பு ஊடலாக பிரிந்தும் இருந்தது. சில நேரங்களில் இந்த நட்பு பல உறவுகளை ஜெயலலிதாவிடம் இருந்து பிரித்ததாகவும் சொல்லப்பட்டது. நிழல் முதல்வர், அரசியல் காய் நகர்த்துவர், மறைமுக ஆட்சி செய்பவர், என்றெல்லாம் செய்திகள் பத்திரிகைகைளை இட்டு நிரப்பின. அவை உண்மையோ, பொய்யோ அதற்குள் நாம் செல்ல தேவையில்லை. ஆனால் சசிகலா என்றால் அது ஜெயலலிதாவின் தோழிதான் என்ற ஆணி தமிழகத்தில் பலமாக அடிக்கப்பட்டது.
காலக்கண்ணாடி
34 ஆண்டுகள் நங்கூரமிட்ட நட்பு அது.. அதன் வெளிப்பாடுதான், 74 நாட்களாக ஜெயலலிதா அப்போலோவில் இருந்தபோது, அவரை பாதுகாத்தார். கடைசி உயிர்மூச்சு பிரியும்வரை அது ஒட்டியே கிடந்தது. இது உரிமையா? பாசமா? கடமையா? அபிமானமா? ஆனால் அரசியல் வரலாற்றில் என்றும் அழிக்க முடியாத நட்பு என்று மட்டும் காலக்கண்ணாடியாக பளிச்சிட்டே நிற்கும்.
வேறு ஆதாரம் தேவையா?
ஆயிரம் குற்றம் சொன்னாலும், அவர்கள் இருவருக்குள் இருந்த பாசம் தீவிரமானதே. அப்பழுக்கற்றதே. சசிகலாவை நாம் ஒரு கணம் நினைத்தால் ஜெயலலிதாவும், ஜெயலலிதாவை ஒரு கணம் நினைத்து பார்த்தால் சசிகலாவும் நம் கண் முன் வந்து நம்மையும் அறியாமல் வந்து செல்கிறார்கள் என்றால்... இதைவிட ஆதாரம் அவர்களின் நட்புக்கு வேறு என்ன இருக்க முடியும்?
(இன்று நண்பர்கள் தினம்)