ஜெயலலிதா, சசிகலா சம்பந்தப்பட்ட அனைத்துமே மர்மம் தானே? போட்டுத் தாக்கும் ராமதாஸ்
கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மர்மம் நீடித்து வருகிறது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு 90-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட பிரம்மாண்ட பங்களா உள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது அவ்வப்போது அங்கு சென்று ஓய்வு எடுப்பார்.
மிகுந்த பாதுகாப்பு நிறைந்த இந்த கொடநாடு எஸ்டேட்டில் தனியார் நிறுவனம் மூலம் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களை தவிர யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் எளிதில் நுழைந்துவிட முடியாது
பாதுகாப்பு நிறைந்த கொடநாடு
அந்த அளவிற்கு பாதுகாப்பு நிறைந்த பகுதியாக கொடநாடு எஸ்டேட் திகழ்ந்து வந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா மறைவிற்கு பின்பு கொடநாடு எஸ்டேட் களை இழந்துள்ளது. மேலும் சொத்து குவிப்பு வழக்கில் கொடநாடு எஸ்டேட்டும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. எனவே அபராத தொகை வசூலிக்க கொட நாடு எஸ்டேட் கையகப்படுத்தப்படும் என கூறப்பட்டது.
பல கோணங்களில் விசாரணை
இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 10-வது நுழைவு வாயிலில் இருந்த காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
|
அனைத்துமே மர்மம் தானே
இந்நிலையில் அரசியல் நிலவரங்களை டிவிட்டர் பக்கத்தில் போட்டு தனது பாணியில் கிழித்து வரும் பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த கொலை குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். அதில் கொடநாடு பங்களா கொலையாளி கொலையில் மர்மம் நீடிப்பதாக வெளியான தகவலை பதிவிட்டுள்ள ராமதாஸ், ஜெயலலிதா சசிகலா சம்பந்தப்பட்ட அனைத்துமே மர்மம் தானே என்று கூறியுள்ளார்.
ஆச்சரியம் இல்லை
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மமே இன்னும் விலகாமல் உள்ளது. இந்நிலையில் அவரது பங்களாவில் காவலாளி கொலை செய்யப்பட்டிருப்பதிலும் மர்மம் நீடிப்பதில் ஆச்சரியம் இல்லை என்பது போல் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் காவலாளி என்பதையும் ராமதாஸ் கொலையாளி என்றே குறிப்பிட்டுள்ளார்.