ஜெயலலிதாவுக்கு உடல் நிலை பாதிப்பா?.. உடனே தெளிவுபடுத்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் கோரிக்கை!
திருச்சி: தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது உடல்நிலை குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் முதல்வர் ஜெயலலிதா தனது வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பதால், அவரது உடல் நிலை குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த, ஈவிகேஎஸ்.இளங்கோவன், "தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது உடல் நலம் குறித்த செய்திகளுக்கு விளக்கம் அளித்து தெளிவுபடுத்த வேண்டும். ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் குணமடைய நான் பிரார்த்தனை செய்வேன்.
மேலும், தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த தீவிரமாக பாஜக போராடி வருகிறது. முதலில், பாஜக ஆளும் மாநிலங்களில் மது விலக்கை அமல்படுத்தட்டும். அதைவிடுத்து தமிழகத்தில் போராடுவது கண் துடைப்பு நாடகம்" என்றார்.