நாடாளும் தகுதி யாருக்கு இருக்கு? குட்டிக்கதை மூலம் விளக்கிய ஜெ!!
சென்னை: தன் நலன், தன் குடும்ப நலன் என்று பார்க்காமல் ஏழை எளியோருக்கு உதவிய இரண்டாம் நபரே நாட்டை ஆளத் தகுதியான நபர் என்று முதல்வர் ஜெயலலிதா ஒரு குட்டிக்கதை மூலம் விளக்கியுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முரூ.180 கோடியே 41 லட்சம் மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், ரூ.193 கோடியே 23 லட்சம் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது முதல்வர் ஜெயலலிதா கூறிய குட்டிக்கதை:
''ஒரு ஊரில் அரசர் ஒருவர் தனக்கு அடுத்தபடியாக நாட்டை ஆள, தகுதியான நபரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கென்று சில போட்டிகளை வைத்தார். அதில் பல பேர் கலந்து கொண்டனர். கடைசியாக இருவர் மட்டுமே மிஞ்சினர்.
அந்த இருவரிடமும் ஒரே அளவான தங்கக் கட்டிகளைக் கொடுத்து, "இதை நீங்கள் செம்மையாக பயன்படுத்த வேண்டும். எவ்வாறு பயன்படுத்தினீர்கள் என்பதை 3 மாதங்களுக்குப் பிறகு அரசவையில் வந்து அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்" என்று கூறினார் அரசர்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர்கள் இருவரும் அரசவைக்கு வந்தனர். முதல் நபரைப் பார்த்து தங்கத்தை எவ்வாறு பயன்படுத்தினீர்கள் என்று அரசன் வினவினார்.
தனது மகனையும், மகளையும் அவையின் முன் நிறுத்திய அந்த நபர் அழகிய வேலைப்பாடுகள் அமைந்த நகைகளை மகள் அணிந்து கொண்டிருப்பதையும், அழகிய தங்கப் பேழை ஒன்றை மகன் வைத்திருந்ததையும் அரசனுக்கு காட்டினான்.
அவற்றைக் கண்டு வியந்த அவையினர் அரசர் கொடுத்த தங்கக் கட்டிகளை, இவர் நன்றாக பயன்படுத்தி உள்ளார். எனவே, நாட்டினை நன்றாக ஆள்வார் எனக் கூறினர்.
"உங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் மட்டும் தானா?" என அரசன் வினவினார். அதற்கு அந்த நபர் "இல்லை. இல்லை. எனது மற்ற பிள்ளைகளை எல்லாம் நான் தலை முழுகி விட்டேன்" என்று கூறினான்.
சரி. இரண்டாவது நபர் என்ன செய்துள்ளார் என பார்க்கலாம் என்று அரசர் அவனை அழைத்தார். அந்த இரண்டாம் நபர் தன்னுடன் 100 பேரை, அழைத்து வந்திருந்தார்.
"தங்கக் கட்டியை என்ன செய்தீர்கள்? இவர்கள் எல்லாம் யார்?" என்று அரசர் வினவினார். அதற்கு அந்த இரண்டாம் நபர், "இவர்கள் எல்லாம் இந்த ஊரில் ஏழைகளாக இருந்தவர்கள். நீங்கள் கொடுத்த தங்கக் கட்டிகளை இவர்களுக்கு பிரித்துக் கொடுத்து விட்டேன். அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து வியாபாரம் செய்து இவர்கள் இன்று நல்ல நிலைக்கு வந்துள்ளனர்" என்று கூறினார்.
தன் நலன், தன் குடும்ப நலன் என்று பார்க்காமல் ஏழை எளியோருக்கு உதவிய இரண்டாம் நபரே நாட்டை ஆளத் தகுதியான நபர் என, அரசரும் அந்த அவையில் இருந்தவர்களும் முடிவு செய்தனர்.
இந்தக் கதையில் வரும் இரண்டாம் நபரைப் போலத் தான் எனது தலைமையிலான அரசு, மக்கள் நலத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது'' என்றார் ஜெயலலிதா.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் இல்லத் திருமணவிழாவில் பங்கேற்ற ஜெயலலிதா, அப்பா, மகன் கதையை சொன்னார். நேற்றைய தினம் ஆர். கே. நகரில் நாடாளும் தகுதி யாருக்கு என்பது பற்றி குட்டிக்கதை கூறினார். இந்த கதைக்கு எதிர் தரப்பில் இருந்து என்ன ரியக்சன் வரப் போகிறதோ தெரியலையே?