3 தொகுதிகளில் அதிமுக வெற்றி.. அப்பல்லோவிலிருந்தபடி "நன்றி அறிக்கை" வெளியிட்ட ஜெயலலிதா
சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், புதுச்சேரி மாநிலத்தின் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில், சென்னை, ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும், ஜெயலலிதா, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், உடல்நலம் தேறி வரும் எனக்கு 3 தொகுதி வெற்றி எல்லையில்லா மகிழ்ச்சி மற்றும் உற்சாகமளிக்கிறது. மகத்தான வெற்றியை வழங்கிய வாக்காளர்களுக்கு இதயம் கனிந்த நன்றி. கட்சி நிர்வாகிகள், தோழமை கட்சி தலைவர்களுக்கும் நன்றி.
மக்கள் என்பக்கம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நெல்லித்தோப்பு வாக்காளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.