3 ஆண்டு கால அதிமுக ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரமே இந்த வெற்றி: ஜெயலலிதா
சென்னை: மகத்தான வரலாற்று வெற்றியை அளித்த தமிழக மக்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
9 கட்டங்களாக நடந்த 16வது லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் 37 தொகுதிகளில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. மீதமுள்ள இரண்டு இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இத்தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா,
மகத்தான வெற்றியைத் தந்த மக்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிக்காக உழைத்த கழக உடன் பிறப்புகள் மற்றும் தோழமை கட்சிகள் அனைவருக்கும் என் நன்றிகள்.
சதாகாலமும் மக்களைப் பற்றியே சிந்தித்த அரசு அதிமுகவினுடையது. 3ம் ஆண்டு கால அதிமுக ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரமே இந்த வெற்றி. கூட்டணி இன்றி இந்த வெற்றியை பெற்றுள்ளோம்.
புதிதாக அமையவுள்ள அரசுக்கும், பிரதமர் பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கும் எனது வாழ்த்துகள். வரும் காலத்தில் மத்திய அரசுடன் நட்புறவு ஏற்படும் என்று விரும்புகிறேன்.
அதிமுகவை மூன்றாவது முக்கிய கட்சியாக்கிய மக்களுக்கு நன்றி.
லோக்சபா தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வோம் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.