ஜெயலலிதா கைரேகை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது… ஐகோர்ட்
தமிழக முதல்வர் ஜெயலலிதா கைரேகை வைத்துள்ளது தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.
சென்னை: அதிமுக வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கைரேகை பதித்துள்ளது தொடர்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி, அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட செந்தில்பாலாஜி, எம். ரெங்கசாமி, ஏ.கே. போஸ் ஆகியோர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
இந்த வேட்புமனு தாக்கலின் போது, அதிமுக வேட்பாளர்களுக்கு கட்சியின் சின்னம் வழங்குவது தொடர்பான அங்கீகார கடிதத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவின் கையெழுத்து இருக்க வேண்டும். இதற்கு பதிலாக அவரது இடது கை பெருவிரலின் ரேகை பதியப்பட்டு இருந்தது.
இந்த ரேகை, ஜெயலலிதாவினுடையதா என்ற சந்தேகம் இருப்பதாகவும், கையெழுத்திடுவதற்கு பதிலாக கைரேகை வைக்கப்பட்டது தவறு என்றும் தேர்தல் ஆணையத்திற்கு டிராபிக் ராமசாமி கடிதம் எழுதினார். இதற்கு எந்த பதிலையும் தேர்தல் ஆணையம் வழங்கவில்லை.
இதனையடுத்து, மாஜிஸ்டிரேட்டை நியமித்து மருத்துமனைக்குச் சென்று ஜெயலலிதாவிடம் நேரில் கையெழுத்து வாங்கி வர கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் டிராபிக் ராமசாமி கோரியிருந்தார். இது தொடர்பான விசாரணையின் போது, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுத்துவிட்டது. மேலும் வரும் திங்கள் கிழமை இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.