ஜெ. சிகிச்சை விவரங்கள் அடங்கிய 1000 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் சசிகலா தரப்பிடம் ஒப்படைப்பு
ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்கள் அடங்கிய ஆயிரம் பக்கங்கள் ெகாண்ட மருத்துவ ஆவணங்களின் நகல் சசிகலா வழக்கறிஞர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்கள் அடங்கிய ஆயிரம் பக்கங்கள் கொண்ட மருத்துவ ஆவணங்களின் நகல் சசிகலா வழக்கறிஞர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து தமிழக அரசு சார்பில் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 30க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளது.
இந்நிலையில் அப்போலோ நிர்வாக இயக்குநர் பிரதாப்ரெட்டி மற்றும் டாக்டர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் அடங்கிய ஆவணங்களின் தொகுப்புகள் வழங்க வேண்டும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் விசாரணை ஆணையத்தில் கேட்டனர்.
அதன் அடிப்படையில், கடந்த 2016 செப்டம்பர் 22ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் அடங்கிய மருத்துவ ஆவணங்களை நேற்று சசிகலா தரப்பு வழக்கறிஞர்களிடம் வழங்கினர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட 30 தொகுப்புகள் வழங்கப்பட்டன. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அப்போலோ மருத்துவர்கள் மற்றும் டாக்டர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய இந்த ஆவணங்கள் முக்கியமானவை என்பதால் சகிகலா தரப்பு வழக்கறிஞர்கள் அதை ஏற்கனவே கேட்டிருந்தனர். அந்த ஆவணங்களின் அடிப்படையில் அப்போலா மருத்துவமனை நிர்வாகம், டாக்டர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படும்.