ஜெ. சிகிச்சை.. எல்லா சிசிடிவி பதிவும் அழிஞ்சு போச்சு... குண்டைத் தூக்கிப் போட்ட அப்பல்லோ!!
ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த வீடியோக்கள் அழிந்துவிட்டன என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த வீடியோக்கள் அழிந்துவிட்டன என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக பதிலளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய விசாரணை கமிஷனின் காலம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலம்
நீதிபதி ஆறுமுகசாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர், அப்பல்லோ செவிலியர்கள், டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர், செயலாளர், சசிகலா குடும்பத்தினர் என அனைத்து தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறார். அவர்கள் அளிக்கும் தகவல்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்படுகிறது.
ஆவணங்கள்
விசாரணை கமிஷனில் சசிகலா சார்பில் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் சாட்சியம் அளித்தும் குறுக்கு விசாரணை நடத்தியும் வருகிறார். அப்பல்லோ மருத்துவமனை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக சில ஆவணங்களை தாக்கல் செய்தது.
கேமரா இல்லை
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பான வீடியோ ஆதாரங்களை வெளியிடுமாறு எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் சி.சி.டி.வி. காட்சிகள் தங்களிடம் இல்லை என்றும், முக்கிய பிரமுகர்கள் சிகிச்சை பெறும் அறைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைப்பது இல்லை என்றும் தெரிவித்தது அப்பல்லோ நிர்வாகம்.
அப்பல்லோவுக்கு கடிதம்
இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்ட தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலுக்கு வீடியோவை ஒப்படைக்குமாறு விசாரணை ஆணையம் உத்தரவிட்டது. மேலும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கும் சி.சி.டி.வி. வீடியோ பதிவுகளை ஒப்படைக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டது.
அழிந்துவிட்டன
இந்நிலையில் இதுகுறித்து அப்பல்லோ நிர்வாகம் விசாரணை கமிஷனுக்கு கடிதம் வாயிலாக பதில் அளித்துள்ளது. அதில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி. டி.வி. வீடியோ பதிவுகள் அழிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பல்லோ சர்வர்கள்
மேலும் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி. சர்வர்களில் ஒரு மாத பதிவுகள் மட்டுமே சேமித்து வைக்க முடியும். அதற்கு மேல் சேமிக்க முடியாது.
அழிந்து விடும்
புதிதாக பதிவுகள் சேரும்போது பழைய பதிவுகள் தானாகவே அழிந்து விடும். எனவே வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சி.சி.டி.வி. பதிவு சர்வரை நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து அதில் பழைய பதிவுகள் இருக்கிறதா? என்று கண்டுபிடிக்க ஆறுமுகசாமி கமிஷன் முடிவு செய்துள்ளது.
விளக்கம் கேட்பு
மேலும் முக்கிய பிரமுகர்கள் சிகிச்சை பெறும் பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைப்பதில்லை என்று அப்பல்லோ நிர்வாகம் கூறியிருந்தது. இது தொடர்பாகவும் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை கமிஷன் விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.