சர்ச்சையை ஏற்படுத்திய ஜெ. வீடியோ... விசாரணைக் கமிஷனிடம் ஒப்படைப்பு!
தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதாவின் வீடியோ பதிவுகள் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை : ஆர்கே நகர் தேர்தலுக்கு முந்தைய நாள் டிடிவி. தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதாவின் வீடியோ பதிவுகள் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திருப்புமுனையை ஏற்படுத்தியது ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ என்று வெளியிடப்பட்ட காட்சிகள். ஆர்கே நகர் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய தினம் ஜெயலலிதா பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பப்படுவதை தாங்க முடியாமல் ஜெ.வின் வீடியோவை வெளியிடுவதாக வெற்றிவேல் கூறினார்.
தன்னுடைய செல்போனில் இருந்த வீடியோ பதிவுகளை தலைமைச் செயலகத்தில் வைத்தே பத்திரிக்கையாளர்களிடம் காட்டினார். அந்த வீடியோவில் ஜெயலலிதா படுக்கையில் அம்ர்ந்து கொண்டு டிவி பார்த்துக் கொண்டே ஜூஸ் குடிப்பது போல இருந்தது.
வெற்றிவேல் வெளியிட்ட இந்த வீடியோ பல கேள்விகளை எழுப்பியது. எத்தனையோ குற்றச்சாட்டுகள் சசிகலா, தினகரன் மீது வந்த போதும் இந்த வீடியோவை வெளியிடாமல் தேர்தலுக்கு முந்தைய நாள் வீடியோ வெளியிடப்பட்டது கீழ்த்தரமான அரசியல் என்று பல விமர்சனங்களும் எழுந்தன.
மற்றொரு புறம் தேர்தல் விதிமுறைகளை மீறி வீடியோ வெளியிடப்பட்டதாக தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் வெற்றிவேல் மீது காவல்துறையில் புகார் அளித்தார். மேலும் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்ட போதும் வீடியோவை கமிஷனிடம் கொடுக்காமல் தன்னிச்சையாக வெளியிட்டதாக தேர்தல் ஆணையமும் வெற்றிவேல் மீது வழக்கு தொடர்ந்தது.
இதனையடுத்து வீடியோ நகல் மற்றும வேறு ஆதாரங்கள் இருந்தால் அவற்றை ஆணையத்திடம் ஒப்படைக்குமாறு வெற்றிவேலுக்கு நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் இரண்டு தினங்களுக்கு முன்னர் சம்மன் அளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக வெற்றிவேல் தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று விசாரணைக் கமிஷனிடம் வீடியோ பதிவு சிடியை ஒப்படிடைத்துவிட்டு சென்றதாக தெரிகிறது.