ஆர். கே.நகர் தொகுதியை முதன்மை தொகுதியாக மாற்றுவேன்... : ஜெயலலிதா உறுதி
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு தன் நெஞ்சில் தனி இடமுண்டு என்று கூறிய முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்திலேயே ஆர்.கே.நகர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக, முதன்மை தொகுதியாக மாற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயலலிதா, ஆறாவது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார். சரித்திர சாதனையாக எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக தொடர்ந்து இரண்டாவது முறையாக அரியணை ஏறியுள்ள ஜெயலலிதா, ஆர்.கே.நகர் தொகுதியில் வீதி வீதியாக வேனில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
மாலை 5.30 மணிக்கு போயஸ் தோட்டத்தில் இருந்து புறப்பட்ட ஜெயலலிதாவை, வழியெங்கும் திரண்டு நின்றிருந்த தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். ஆர்.கே.நகர் தொகுதியில் பூமழை தூவி வரவேற்றனர்
மக்களின் வரவேற்பினை ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா, காசிமேடு பகுதியில் திரண்டிருந்து தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், என்னை வெற்றி பெற வைத்த வாக்காள பெருமக்களாகிய உங்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்றார்.
என்னை தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற வைத்த என் தொகுதி மக்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன். ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு என் நெஞ்சில் தனி இடமுண்டு.
கடந்த இடைத்தேர்தலின் போது பெருவாரியான வாக்குகள் வித்தியாகத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். நலத்திட்டங்களை, நான் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறேன். நான் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்.
தமிழகத்திலேயே ஆர்.கே.நகர் தொகுதியை தனித்துவம் மிக்க தொகுதியாக, தலை சிறந்த தொகுதியாக மாற்றுவேன் என்றும் ஜெயலலிதா கூறினார். மகத்தான வெற்றி பெற வைத்து மீண்டும் முதல்வராக அமர வைத்த அன்பான வாக்காள பெருமக்களுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் ஜெயலலிதா கூறினார்.
காசிமேடு பகுதியில் நன்றி தெரிவித்த ஜெயலலிதா, தொடர்ந்து திருவொற்றியூர் நெடுஞ்சாலை,வ.உ.சி. சாலை சந்திப்பு,வைத்தியநாதன் பாலம், எண்ணூர் நெடுஞ்சாலை, மகாராணி தியேட்டர் உள்ளிட்ட 21 இடங்களில் அவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
வீதி வீதியாக ஆர்.கே.நகர் தொகுதியில் வலம் வந்த ஜெயலலிதாவை மேள தாளம் முழங்க, பூ மழை தூவி வாக்காளர்கள் வரவேற்றனர். நன்றி தெரிவித்ததன் மூலமாக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்றே தொடங்கி விட்டார் ஜெயலலிதா.