தராசு முள் போல் சபாநாயகர் செயல்படுவார்: முதல்வர் ஜெ., வாழ்த்து
சென்னை: சட்டசபை சபாநாயகர் தராசு முள் போல தொடர்ந்து செயல்படுவார் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
15வது சட்டசபையின் தேர்வு செய்யப்பட்ட சபாநாயகர் தனபால் மற்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரை சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா வாழ்த்தி பேசினார்.
தமிழக சட்டசபையில் சபாநாயகர்களாக பதவி வகித்தவர்களைப் பற்றியும், அவர்களின் மாண்புகளை, பெருமைகளைப் பற்றியும் போற்றி பேசிய ஜெயலலிதா, தொடர்ந்து இரண்டாவது முறையாக சபாநாயகராக தேர்வு பெற்ற தனபாலுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஜனநாயக நாட்டில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரண்டும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போல் செயல்பட வேண்டும். ஒருபக்கம் சிதைந்து போனால் கூட நாணயம் செல்லாதது ஆகிவிடும் என்றார் பேரறிஞர் அண்ணா. அண்ணாவின் பெயரை கட்சியின் பெயரிலும், அண்ணாவின் உருவத்தை கொடியிலும் தாங்கியுள்ள கட்சி அதிமுக என்று கூறினார்.
அண்ணாவின் கொள்கையை காப்பாற்ற நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம் என்று கூறிய ஜெயலலிதா, அதேபோல எதிர்கட்சியினரும் சபையின் மாண்புகளை உணர்ந்து தங்களின் கடமைகள், பொறுப்புக்களை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சட்டசபையில் முதன்முறையாக வேறு எந்த கட்சிகளும் இல்லாத அளவிற்கு அதிமுக, திமுக மட்டுமே அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை கொண்டுள்ளது. மக்களுக்கு தேவையான ஆக்கப்பூர்வமாக விவாதங்களை முன்வைக்க வேண்டும்.
சட்டசபையில் அனல் பறக்கும் விவாதங்கள், காரசார விவாதங்கள் நடைபெற்றாலும், அவையில் சூடு பறந்தாலும், அதை திறமையுடன் சமாளிப்பதில் வல்லவர் சபாநாயகர் தனபால் என்று புகழாரம் சூட்டினார் ஜெயலலிதா.
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வகித்த பதவிகளை பட்டியலிட்ட ஜெயலலிதா, அவரும் இரண்டாவது முறையாக துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் தனது வாழ்த்துக்களை முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
என்னை 6 வது முறையாக முதல்வராக முதல்வராக தேர்வு செய்த மக்களுக்கும், ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கும் இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சிக்கட்டிலில் அமரவைத்த தமிழக மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.