முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றி... முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்
சென்னை : புதன்கிழமை துவங்கி 2 நாட்களாக நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று நிறைவுரையாற்றினார்.
மாநாட்டின் நிறைவு விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது...
2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தாக்கல் செய்த பட்ஜெட் உரையில் இந்த மாநாடு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த மாநாடு குறித்த ஏற்பாடுகளை நான் தனிப்பட்ட முறையில் கண்காணித்தேன்.
முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பாக நடைபெற உழைத்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்புகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
சர்வதேச முதலீட்டாளர் மாநாடு மூலம் தமிழகத்துக்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது.
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் 16 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளது. 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
இந்த மாநாடு மூலம் தமிழகத்துக்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது.
சென்னையில் நிமிடம் ஒன்றுக்கு 3 கார்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இன்று பெறப்பட்டுள்ள முதலீடு மூலம் உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி மையமாக சென்னை உருவாகும் என்று கூறினார்.
மேலும், மாநாட்டின் வெற்றியோடு நிற்காமல் முதலீட்டாளர்கள் உடனடியாக தொழில் தொடங்க உதவ வேண்டும்.
அடுத்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 2017ம் ஆண்டு நடைபெறும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.