இலங்கை சிறையில் இருந்து 84 தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை: இலங்கை சிறையில் உள்ள 84 தமிழக மீனவர்களையும், 62 படகுகளையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்த அவரது கடிதத்தில், "இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 84 மீனவர்களையும், அவர்களது 62 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை கடற்படையால் அடிக்கடி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. இதனை தடுக்க பிரதமர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1974, 1976ம் ஆண்டுகளில் இந்தியா - இலங்கை இடையே ஏற்பட்ட சர்வதேச கடல் எல்லை தொடர்பான ஒப்பந்தத்தை தமிழக அரசு ஏற்கவில்லை. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
எனினும் மீண்டும், மீண்டும் மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. எனவே, மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு உடனடியாக அறிவுறுத்த வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.