சிறுவாணியில் கேரளா அணை கட்டுவதை தடுக்க வேண்டும்.. மோடிக்கு ஜெயலலிதா கடிதம்! #siruvani
சென்னை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் விவகாரம் தொடர்பாக கேரள அரசிற்கு எதிராக தமிழக சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சுட்டிக்காட்டி ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.
சிறுவாணி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கேரளா அரசு திட்டமிட்டு இதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளது. சிறுவாணியில் அணை கட்டினால் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடும், விவசாயமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கேரளாவின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தின் அனைத்து கட்சிகளும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவின் அணை கட்டும் முயற்சியை தடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். மேலும், சிறுவாணி அணை பிரச்சனை தொடர்பாக சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
அதில், தமிழ்நாடு அரசு மற்றும் காவேரி நடுவர் மன்றத்தின் இசைவு பெறாத நிலையில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவின் 96வது கூட்டத்தில் அட்டப்பாடி பள்ளத்தாக்கு திட்டத்திற்கு நிலையான ஆய்வு வரம்புகள் வழங்குவதற்கான பரிந்துரை தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.
இந்த தீர்மான நகலுடன் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு பிரதமர் மோடி அறிவுறுத்தவேண்டும் என்று முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல் துறை அவசரகதியாக அளித்த அனுமதியை ஏற்கக் கூடாது. அது தமிழக அரசின் அனுமதியை கேட்காமல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நதிநீர் கழகத்தின் அனுமதியையும் பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.