அடுத்தடுத்து பாய்ந்த வழக்குகள்.. 14வது முறையாக நிரபராதி என நிரூபித்த ஜெயலலிதா
சென்னை: அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா தம் மீதான 14வது வழக்கிலும் நிரபராதி என நிரூபித்து மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார்.
1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்தார். அதன் பிறகு 1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் இருந்தது.
அப்போது டான்சி வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்கு, பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு, வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழக்கு, ஸ்பிக் பங்கு வழக்கு, வருமானவரி வழக்கு என்று 14 வழக்குகள் ஒன்றின் மேல் ஒன்றாக தொடரப்பட்டது.
பிளசன்ட் ஸ்டே ஹோட்டல்
2001-ம் ஆண்டு ஜெயலலிதா 2வது முறையாக முதல்வராக பொறுப்பு ஏற்றார். அதன்பிறகு ஒவ்வொரு வழக்கிலும் இருந்தும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார். 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அடுத்தடுத்து
2004-ல் ஸ்பிக் பங்கு வழக்கில் இருந்து விடுதலை ஆனார். டான்சி வழக்கும், வருமான வரி வழக்கும் நீண்ட நாட்களாக நடந்தன. அந்த இரு வழக்குகளில் இருந்தும் இறுதியில் ஜெயலலிதா விடுதலை ஆனார்.
13 வழக்குகளில் நிரபராதி
13 வழக்குகளில் தன்னை நிரபராதி என்று ஜெயலலிதா நிரூபித்தும் காட்டினார். அதேபோன்ற தீர்ப்பு சொத்துக்குவிப்பு வழக்கிலும் வரும் என்று அ.தி.மு.க.வினர் எதிர்பார்த்தனர்.
ஆனால் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அண்ணா தி.மு.க.வினர் எதிர்பார்க்காத வகையில் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் தீர்ப்பு அளித்த கையோடு ரூ100 கோடி அபராதமும் விதித்தார்.
14வது வழக்கிலும் நிரபராதி
இதனால் 10 ஆண்டுகாலம் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி 18 ஆண்டுகால வழக்கை 3 நிமிட தீர்ப்பில் உடைத்து ஜெயலலிதாவை நிரபராதி என விடுதலை செய்திருக்கிறார்.
இதன் மூலம் 14வது வழக்கிலும் தாம் நிரபராதி என ஜெயலலிதா நிரூபித்துள்ளார்.