வர்தா புயலப்ப அம்மா நிலவேம்பு கஷாயம் குடிக்க சொன்னாங்க - திண்டுக்கல் சீனிவாசன்
வர்தா புயலின் போது முதல்வர் ஜெயலலிதா நிலவேம்பு குடிநீர் குடிக்கச் சொன்னதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து 10 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் அவர் 6 மாதங்களுக்கு முன்னர் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயத்தை குடிக்கச் சொன்னதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு அலோபதி மருந்து கை கொடுக்காததால், சித்த மருந்தை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மற்றும் அரசு நடத்தும் அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப் பட்டு வருபவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் கொடுக்கப்படுகிறது. நிலவேம்பு குடிநீர் வீடு வீடாக கொடுக்க அரசு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கத்தில் உள்ள மாநில வன ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற மருத்துவ தாவரங்கள் சாகுபடி மற்றும் வர்த்தகம் தொடர்பான தேசிய பயிலரங்க துவக்க விழாவில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வனக் காவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வை ஏற்படுத்தி, நிலவேம்பு கசாயத்தை குடிக்கச் சொன்னதாக கூறினார்.
வர்தா புயல் வீசியபோது எங்களை அழைத்து பேசிய முதல்வர் அம்மா, அனைவரையும் நிலவேம்பு கசாயம் குடித்து பாதுகாத்துக்கொள்ள சொன்னதாக தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மரணமடைந்தார். வர்தா புயல் சென்னையை தாக்கிய போது முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இருந்தார். இது பற்றிய எந்த நினைவும் இல்லாமல் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே!
ஒருவேளை அம்மாவின் ஆன்மா வந்து சொல்லியிருக்குமோ? இருந்தாலும் இருக்கும் !