காவலர்களுக்கு அள்ளித் தந்த ஜெ... 20,000 வீடுகள், புல்லட் புரூப் உடைகள்.. 71 புதிய அறிவிப்புகள்!
சென்னை: ரூ.1,615 கோடி மதிப்பீட்டில் 20 ஆயிரம் காவலர் குடியிருப்புகள் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார். காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது இவ்வாறு தெரிவித்த முதல்வர், சீருடை, உபகரணங்கள் பராமரிப்புக்கான தொகை ரூ.450லிருந்து ரூ.550 ஆக உயர்த்தப்படும். நக்சல் தடுப்புப்பிரிவு காவலர்களுக்கு சிறப்புப்படி வழங்கப்படும் என்று கூறினார்.
தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. உறுப்பினர்களின் விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் திமுக எம்.எல்.எல்களின் செயல்பாடுகளுக்கு பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். கடந்த தி.மு.க.ஆட்சியின் போது, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றார்.
கடந்த 2006ல் மதுரையி்ல் மர்ம நபர் தன்னை தாக்க வந்ததாக ஸ்டாலின் புகார் கூறினார். ஸ்டாலின் தாக்கப்படும் அளவிற்கு தி.மு.கஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சட்டம் ஒழுங்கு கெட்டு போனதாக தி.மு.க.வினர் பொய்புகார் கூறி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
அ.தி.மு.க. ஆட்சியில், குற்றப்புகார்கள் மீது போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். போலீசாரி்ன் நடவடிக்கையால் அவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 2 ஆளில்லா விமானங்கள் மூலம் குற்றச்செயல்கள் கண்காணிக்கப்படுகின்றன.
தி.மு.க. ஆட்சியில் பல அதிகார மையங்கள் இருந்தன. போலீசாரின் நடவடிக்கையில் குறுக்கீடு இருந்தது. அப்போது பலரது சொத்துக்கள் அவர்கள் கடத்தி செல்லப்பட்டும், மிரட்டியும் வாங்கப்பட்டன. இதனால் தி.மு.க.ஆட்சியில் 1615 நிலமோசடி தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்றும் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து 15 தலைப்புகளின் கீழ் 71 அறிவிப்புகளை ஜெயலலிதா சட்டசபையில் வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள்:
- காவலர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு, அவர்களது பதவி மற்றும் பணி பிரிவு ஆகியவற்றின் அடிப்படையில் மாதந்தோறும் ரூ.200லிருந்து ரூ.3,000 வரை இடர்படி வழங்கப்படுகிறது. இந்த இடர்படி இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.60 கோடியே 73 லட்சம் செலவு ஏற்படும்.
- காவலர்களுக்கு தற்போது அவர்களது பதவித் தரத்திற்கு ஏற்ப சீருடை மற்றும் உபகரண பராமரிப்புப்படி மாதம் ஒன்றுக்கு 100 ரூபாயிலிருந்து 450 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இந்த பராமரிப்புப்படி மாதம் ஒன்றுக்கு 100 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.
- இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக ரூ14 கோடியே 50 லட்சம் செலவு ஏற்படும்.
- நக்சலைட் தடுப்பு சிறப்புப் பிரிவு காவல் பணியாளர்கள், எல்லையோர மாநிலங்களின் மும்முனை சந்திப்பில் நக்சலைட் ஊடுருவலை தடுப்பதற்கும், மாவோயிஸ்ட்டுகளின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கும், அடர்ந்த வனப் பகுதிகளில் தேடுதல் வேட்டை மேற்கொண்டு வருகின்றனர்.
- அவர்களின் மனத் திண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு, சிறப்பு இலக்குப் படையினருக்கு இணையாக இவர்களுக்கும் படிகள் வழங்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக ஒரு கோடியே 83 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
- ரூ.1,615 கோடி மதிப்பீட்டில் 20 ஆயிரம் காவலர் குடியிருப்புகள் கட்டப்படும். கடலூர் மாட்டம், திருப்பாப்புலியூர், தேனி மாவட்டம், தேவதானப்பட்டி, திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு ஆகிய இடங்களில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்கள், காவலர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டப்படும். நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை ரயில் போலீசாருக்கு வீடுகள் கட்டப்படும்.
- சென்னையில் உள்ள செயலாக்கப் பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் அலுவலகக் கட்டடத்தில் இடப் பற்றாக்குறையைக் களையும் வகையில், 1 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில் தற்போதுள்ள கட்டடத்தில் கூடுதல் தளம் கட்டப்படும். புது வண்ணாரப்பேட்டையில் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் சமுதாயக் கூடம் கட்டப்படும். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் மோப்ப நாய் பிரிவிற்கென கட்டிடம் கட்டப்படும்.
- திருவள்ளுர் மாவட்டம், வெள்ளவேடு காவல் நிலையத்திற்கு 1 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் கட்டடம் கட்டப்படும். தஞ்சாவூர் பேராவூரணி காவல் நிலையம், கிருஷ்ணகிரி ஊத்தங்கரை காவல் நிலையம், திருச்சி ஜம்புநாதபுரம் காவல் நிலையம், அரியலூர் போக்குவரத்து காவல் நிலையம், மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகம், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சிபிசிஐடிக்கு தனி கட்டிடங்கள் கட்டப்படும்.
- சாலைகளில் போக்குவரத்து இடையூறுகளை அகற்றுவதற்கு ஏதுவாக 81 லட்சம் ரூபாய் செலவில் 3 கனரக மீட்பு வேன்கள் வாங்கப்படும். காவலர்கள் விரைந்து செல்ல, ஜீப்புகள், மோட்டார் சைக்கிள்கள், கூரையுடன் கூடிய லாரிகள், காவலர் குடியிருப்புகளுக்கு குடிநீர் லாரிகள், குற்றவாளிகளை அழைத்துச் செல்ல வேன்கள், பெரிய ஜீப்புகள், ஆம்புலன்ஸ்கள், வாங்கப்படும்.
- பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு ரூ.60 லட்சம் செலவில் 100 குண்டு துளைக்காத பொதியுறைகள், வெடிகுண்டுகளை கண்டறியும் நவீன கருவிகள் வாங்கப்படும்.
- விஐபிக்கள் வருகை மற்றும் முக்கிய பொது நிகழ்வுகளின் பாதுகாப்பு சோதனையின் போது வெடிமருந்துகள் சம்பந்தப்பட்ட பொருட்களைக் கண்டறிய 51 லட்சம் ரூபாய் செலவில், 3 வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள், வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் சிறிய ஜாமர், காவலர்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் போது தரையில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் மின்னணு சாதனங்களைக் கண்டுபிடிக்க ஏதுவாக கருவிகள் ஆகியவை வாங்கித் தரப்படும்.
- இரவு நேர ரோந்துக்கு பைனாகுலேர் கருவிகள், கேமராக்கள் வாங்கப்படும். தகவல் தொடர்புக்கு வானொலி சாதனங்கள், உபகருவிகள் வாங்கப்படும்.
- இயற்கை பேரிடரின் போது மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக 1 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் எடுத்துச் செல்லத்தக்க அளவிலான 100 அவசரகால ஒளியூட்டுக் கருவிகள் வாங்கப்படும்.
- குற்றவங்களை கண்டுபிடிக்க தடயவியல் துறைக்கான நவீன கருவிகள், செல்போன்கள், ஆய்வுக் கருவிகள் வாங்கப்படும். ஊர்க்காவல் படையை பலப்படுத்தும் வகையில் ரூ.45 லட்சம் செலவில் கருவிகள் வாங்கப்படும் என காவல்துறைக்கு மட்டும் 71 அறிவிப்புகள், ரூ193 கோடியே 32 லட்சம் செலவில் வாங்கப்படும் என்றார்.