தக்கோலம் தலைமைக் காவலர் மரணம்: முதல்வர் ரூ.10 லட்சம் நிவாரணம்
சென்னை: வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம், தக்கோலம் தலைமைக் காவலர் கனகராஜ் முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். கனகராஜின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் , முதல்-அமைச்சருமான முதல்வர் ஜெயலலிதா இரங்கல் செய்தியில்,
வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம், தக்கோலம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த கனகராஜ் நேற்று தக்கோலம் ஆற்றில் மணல் கடத்துவதை தடுக்கச் சென்ற போது, அங்கு மணல் அள்ளிக் கொண்டிருந்த டிராக்டர் ஓட்டுநர் சுரேஷ் என்பவரை டிராக்டரிலிருந்து கீழே இறக்க முற்பட்டுள்ளார்.
அப்போது, டிராக்டர் ஓட்டுநர், தலைமைக் காவலர் கனகராஜை கீழே தள்ளி, டிராக்டரை இயக்கிய போது, கனகராஜ் டிராக்டரில் சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
கடமை உணர்வுடன் பணியாற்றும் போது தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த தலைமைக் காவலர் திரு. கனகராஜ் அவர்களின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது மனைவிக்கும், குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் கனகராஜின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்