அப்பல்லோவில் ஜெ.: கவலையாய் கடந்த செப்டம்பர்.. ஆறுதல் தந்த நவம்பர்... அதிர்ச்சி தந்த டிசம்பர்!
முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் ஆகி விட்டன. இந்த 75 நாட்களில் அவரது உடல்நிலை பாதிப்பு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் அப்பல்லோ வெளியிட்ட அறிக்கைகள் குறித்த
சென்னை: தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா எப்படியும் இன்னும் சில தினங்களில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று மாலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 22ம் தேதி தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. பின்னர், அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.
அதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சையின் பலனாக அவர் உடல்நலம் தேறியது. இதனால் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். விரைவில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று மாலை மீண்டும் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் தற்போது வரை அவரது உடல்நிலை பாதிப்பு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் அப்பல்லோ வெளியிட்ட அறிக்கைகள் குறித்த சிறிய தொகுப்பு இதோ...
22.09.2016 - முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
23.09.2016- ஜெயலலிதாவைப் பரிசோதித்த அப்பல்லோ மருத்துவர்கள், அவர் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் அறிக்கை வாயிலாக தெரிவித்தனர்.
24.09.2016- ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர் வழக்கமான உணவை உட்கொண்டதாகவும் மருத்துவமனை வாயிலாக தெரிவிக்கப்பட்டது
25.09.2016 - முதலமைச்சருக்கு காய்ச்சல் குறைந்துள்ளதாகவும், வழக்கமாக உட்கொள்ளும் உணவை உட்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சரின் உடல்நலம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவியிருக்கும் செய்தி அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை எனவும் மருத்துவமனை தெரிவித்தது.
29.09.2016- முதலமைச்சருக்கு தேவையான அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும், மருத்துவமனையில் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
30.09.2016- லண்டன் டாக்டர் ரிச்சர்ட் தமிழகத்திற்கு வந்து ஜெயலலிதாவிற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவரது அறிவுரையின்படி ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
3.10.2016- முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனை தந்துள்ளதாக அப்போலோ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட 6வது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதில் முதல்வருக்கு செயற்கை சுவாசம் தரப்படுவதாக கூறப்பட்டிருந்தது. முதல்வருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதை இந்த அறிக்கை சற்று சுட்டிக் காட்டியிருந்தது மருத்துவக்குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
04.10.2016 - 7வது அறிக்கையை அப்பல்லோ வெளியிட்டது. முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடருவதாகவும், அவர் சில நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
6.10.2016- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவக்குழுவினர் 3 பேர் நேரில் வந்து முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்தக்குழு அக்டோபர் 7-ஆம் தேதி வரை சென்னையில் தங்கி முதலமைச்சரின் உடல்நிலையை கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே செப்டம்பர் 30-ந்தேதி சென்னை வந்து முதல்வருக்கு சிகிச்சையளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மீண்டும் சென்னை வந்து முதல்வரின் உடல்நிலையை சோதித்ததாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
08.10.2016- அப்பல்லோவின் 9வது அறிக்கை அக்டோபர் 8ம் தேதி வெளியானது. அதில் நுரையீரல் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை தொடருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பிசியோதெரப்பி தரப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.
10.10.2016- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் கில்லானி மீண்டும் சென்னை வந்து இரண்டு நாட்கள் முதல்வரின் உடல்நிலையை கண்காணித்ததோடு, அப்போலோ மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
15.10.2016- திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள் அப்பல்லோவிற்கு நேரடியாகச் சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
21.10.2016- மூத்த இதயசிகிச்சை நிபுணர்கள், தொற்றுநோய் சிகிக்சை நிபுணர்கள், நீரிழிவு சிகிச்சை நிபுணர்கள் முதல்வருக்கு சிகிச்சையளித்து அவரது உடல்நலன் குறித்து கண்காணித்தாக அப்போலோ மருத்துவனை நிர்வாகம் தெரிவித்தது. அப்போது முதலமைச்சர் பேசியதாகவும் கூறப்பட்டது.
04.11.2016- செய்தியாளர்களைச் சந்தித்த அப்பல்லோ சேர்மன் டாக்டர் பிரதாப் சி ரெட்டி. அப்போது அவர், "ஜெயலலிதா குணமாகி விட்டார். எப்போது வீடு திரும்புவார் என்பதை அவரே முடிவு செய்வார்' எனத் தெரிவித்தார்.
13.11.2016- அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சுமார் 50 நாட்களுக்குப் பிறகு முதன்முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்ஜெயலலிதா. அதில் அவர், 'மக்களின் பிரார்த்தனையால் தான் மறுபிறவி எடுத்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
17.11.2016- ஜெயலலிதாவின் நுரையீரல் தொற்று சரியாகி விட்டதாகவும், அவர் செயற்கையான கருவிகள் இன்றி நீண்ட நேரம் இயற்கையாக சுவாசிப்பதாக அறிவிக்கப்பட்டது.
19.11.2016- தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண தனி சிகிச்சை அறைக்கு ஜெயலலிதா மாற்றப்பட்டார்.
20.11.2016- ஜெயலலிதா பூரண நலம் பெற்று விட்டதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டது.
25.11.2016- ஜெயலலிதா மெதுவாக பேசுவதாக அப்பல்லோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற நம்பிக்கை தொண்டர்கள் மத்தியில் அதிகமாகியது.
04.12.2016- இந்த சூழ்நிலையில் தான் நேற்று மாலை, திடீரென ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்ட ஜெயலலிதாவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதயநோய் சிகிக்சை நிபுணர்களும், சுவாசவியல் நிபுணர்களும் சிகிச்சை அளித்ததாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.