தமிழக வனத்துறை அமைச்சராக எம்.எஸ்.எம். ஆனந்தன் மீண்டும் நியமனம் – ஜெ.பரிந்துரை
சென்னை: தமிழக வனத்துறை அமைச்சராக எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ரோசய்யா உத்தரவிட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர் ஆனந்தன், 9ம் தேதி பிற்பகல் ஆளுநர் முன்னிலையில் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை ஆன பிறகு, ஓபிஎஸ் அமைச்சரவையில் இருந்த ஆனந்தன் மட்டும் நீக்கப்பட்டார். கடந்த 2 மாத ஜெயலலிதா அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் தமிழக போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை ஜெயலலிதா அதிரடியாக நீக்கினார்.
முறைகேடு புகார்
செந்தில்பாலாஜி கடந்த 2011ம் ஆண்டு மே 16ம் தேதி கடந்த 4 ஆண்டுளுக்கும் மேல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். இவர் மீது பல புகார்கள் கூறப்பட்டு வந்தாலும், இவரை ஜெயலலிதா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவில்லை. காரணம், இவர் கட்சியின் மேலிடத்தில் மிகவும் செல்வாக்காக இருந்தார்.
ஏமாந்த அமைச்சர்கள்
சமீபத்தில் தமிழகம் முழுவதும் 1,700க்கும் மேற்பட்ட டிரைவர், கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் முறைகேடு நடந்ததாக பல்வேறு தரப்பினர் புகார் கூறினர். இதில், சக அமைச்சர்களே செந்தில் பாலாஜியிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாகவும் கட்சி மேலிடத்திற்கு ஆதாரத்துடன் புகார் கொடுக்கப்பட்டது.
ஆனந்தன் பதவி பறிப்பு
அப்போதைய வனத்துறை அமைச்சராக இருந்த ஆனந்தன் பணம் கொடுத்து ஏமாந்ததாகவும், பணத்தை திருப்பிக்கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த மோதலால்தான் ஆனந்தனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதாகவும் அப்போது காரணம் கூறப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி கூடுதலாக வனத்துறையை கவனித்து வந்தார்.
மீண்டும் அமைச்சர் பதவி
கடந்த வாரம் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய ஜெயலலிதா, எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு மீண்டும் வனத்துறை அமைச்சராக பதவியை அளித்துள்ளார். திருப்பூர் வடக்குத் தொகுதியில் இருந்து தமிழக சட்டசபைக்கு எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்ட எம்.எஸ்.எம் ஆனந்தன் எஸ்.எஸ்.எல்.சி வரை படித்துள்ளார். திருப்பூர் அதிமுக மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார்.