ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜரான வக்கீலுக்கு சம்பள பாக்கி.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞருக்கு சம்பள பாக்கி வைத்துள்ள விவகாரம் குறித்து பதிலளிக்க கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசுக்கு, ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 4 பேர் மீது வருவாய்க்கு அதிகம் சொத்து சேர்த்தது குறித்து தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை தமிழகத்திலிருந்து, கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டு அங்குள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை சுமார் 18 வருட காலம் இழுத்தடிக்கப்பட்டதால், பல வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் இடை, இடையே, பணிமாறுதலுக்கு உள்ளாகியிருந்தனர்.
இப்படி அரசு சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர்களில் சதீஷ் கிர்ஜியும் ஒருவராகும். இவரை 2015ம் ஆண்டு ஜனவரியில் (ஜெ. ஆட்சியில்) அரசு வழக்கறிஞராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை நியமித்தது.
சிறப்பு நீதிமன்றத்தை போலவே, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையிலும் அரசு சார்பில் வழக்கறிஞர் சதீஷ் கிர்ஜி ஆஜரானார். சதீஷ் கிர்ஜிக்கு முதல்கட்டமாக, சுமார் 4 லட்சம் வரை ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் சம்பளம் தரவில்லையாம்.
தனது சம்பள பாக்கி குறித்து சதீஷ் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி சுசோக ஹின்சிகேரி, குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கும் படி தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.