ரத்த வெள்ளத்தில் ஜெ.. அப்பல்லோவுக்கு அனாதை போல அழைத்து சென்ற கொடுமை- பொன்னையன்
ஜெயலலிதா தாக்கப்பட்டு ரத்த காயங்களுடன் அனாதை போல அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக முன்னாள் அமைச்சர் பொன்னையன் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டன் பங்களாவில் தாக்கப்பட்டு கன்னத்தில் ரத்தம் வடிந்த நிலையில் அனாதை போல அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓபிஎஸ் அணியினர் ஒவ்வொருவரும் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் சசிகலா அணியோ, ஜெயலலிதாவுக்கு ஒன்றுமே நடக்கவில்லை; அவர் நன்றாகவே மருத்துவமனையில் இருந்தார்; மாரடைப்பு மட்டுமே அவர் மரணத்துக்கு காரணம் என கூறி வருகிறது.
அதே நேரத்தில் ஜெயலலிதா, போயஸ் கார்டன் பங்களாவில் தாக்கப்பட்டார் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் தொடர்ந்து கூறி வருகிறார். சென்னையில் ஞாயிறன்று ஓபிஎஸ் வீட்டில் தொண்டர்களுடனான ஆலோசனையின் போது பொன்னையன் பேசியதாவது:
பணிப் பெண் எங்கே?
போயஸ் கார்டனில் ஜெயலலிதா தாக்கப்பட்டார். அதில் நிலை குலைந்து ஜெயலலிதா கீழே விழுந்தார். இதை நேரில் பார்த்த ஜெயலலிதா வீட்டு பணிப் பெண்ணை காணவில்லை.
கன்னத்தில் ரத்த காயங்கள்
ஜெயலலிதா தாக்கப்பட்டு கன்னத்தில் ரத்த காயங்களுடன் எங்கள் கண்ணில் எல்லாம் மிளகாய்பொடியை தூவிவிட்டு அனாதையைப் போல கொண்டு போய் அப்பல்லோவில் சேர்த்தார்கள். மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், பேசினார் என நாங்கள் சொன்னோம்.
தம்பிதுரை சொன்னதை சொன்னோம்
ஆனால் இப்படி சொல்லுமாறு எங்களுக்கு சொன்னதே தம்பிதுரைதான். அவர் சொன்னதை அப்படியே நாங்கள் மீடியாக்களில் சொன்னோம். இவ்வாறு பொன்னையன் கூறினார்.
செம்மலையும் 'திடுக்'
இதேபோல் எம்.எல்.ஏ. செம்மலையும் போயஸ் கார்டன் பங்களாவில் ஜெயலலிதா தாக்கப்பட்டதால்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என குற்றம்சாட்டியுள்ளார். இப்படியான பகீர் தகவல்கள் அதிமுகவினரை மட்டுமல்ல பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.