மனித நேயம் இருக்கும் இடத்தில் அறம் செழிக்கும் - இஃப்தார் விழாவில் ஜெ., பேச்சு
சென்னை: மனிதநேயம் இருக்கும் இடத்தில் அறம் செழிக்கும், ஏழ்மை விலகும், நன்மை பெருகும் என இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
அதிமுக சார்பில் கடந்த 20 ஆண்டுகளாக இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை நந்தம்பாக்கம் வணிக மையத்தில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: எங்கு மனிதநேயம் இருக்கிறதோ அங்கு ஒற்றுமை நிலவும். மனிதநேயம் இருக்கும் இடத்தில் அறம் செழிக்கும், ஏழ்மை விலகும், நன்மை பெருகும். இறைப்பற்றுள்ளவர்களை எந்த துன்பமும் அணுகாது.
எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு அறம் செழிக்கும். நோன்பு இருப்பவர்களுக்கு இறைவனே நேரடியாக உதவி செய்வார். இறைவனே நேரடியாக பலன் தரும் இந்த நோன்பு மிகவும் வலிமையும், புனிதமும் கொண்டது. ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதால் அகமும், புறமும் தூய்மை அடைகிறது
அதிமுக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் அரசு தலைமை காஜி, அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.-க்கள், கூட்டணிக் கட்சி தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி இதே இடத்தில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.