கணவருக்கு உதவியாக களமிறங்கி 'சக்சஸ்' லாரி ஓட்டுநரான ஈரோடு ஜோதிமணிக்கு கல்பனா சாவ்லா விருது
சென்னை: தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருதை ஈரோடு கள்ளிப்பட்டி ஜோதிமணிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வழங்கினார். கனரக லாரிகளை தன்னந்தனியா பிற மாநிலங்களுக்கும் ஓட்டிச் செல்லும் துணிச்சல் பெண்மணியாக திகழ்கிறார் ஈரோடு ஜோதிமணி.
சென்னையில் இன்று நடைபெற்ற 69வது சுதந்திர தின விழாவில் தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது ஈரோடு ஜோதி மணிக்கு வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியை சேர்ந்த ஜோதிமணியின் சாதனை மற்றும் துணிவை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த விருது குறித்து ஜோதிமணி (வயது 30) கூறியதாவது:
எங்கள் லாரியில் டிரைவராக வேலை செய்து கொண்டிருந்த நபர் சில நாட்கள் வேலைக்கு வராமல் இருந்தார். இதனால் நாங்கள் பெருத்த நஷ்டத்துக்கு உள்ளானோம்.
இதையடுத்து எனது கணவருடன் சேர்ந்து நானும் லாரி ஓட்டத்தயாரானேன். முதன் முதலில் கடந்த 2009 ஆம் ஆண்டு மத்தியில் எனது கணவருடன் சேர்ந்து ஐதராபாத்துக்கு லாரி ஓட்டிச்சென்றேன்.
தற்போது குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் ஆயத்த ஆடைகளை தனியாகவே ஏற்றிச்செல்கிறேன். அவ்வாறு சென்று விட்டு திரும்பும்போது பருத்தி, மரம் மற்றும் இயந்திர பாகங்களை தமிழகத்திற்கு பாரம் ஏற்றிவருவேன்.
ஒரு சில நேரங்களில் இரண்டு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை கூட தொடர்ந்து லாரியை இயக்கியுள்ளேன். ஏறத்தாழ ஐந்து வருட கால பயண அனுபவங்களில் நான் ஒரே ஒரு முறை மட்டும் விபத்தை சந்தித்துள்ளேன்.
கடந்த 2012 ஆம் ஆண்டு லாரியின் பிரேக் செயலிழந்ததால், மற்றொரு லாரியுடன் எனது லாரி மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்.
போதுமான வருமானத்தை சம்பாதித்து, சுயமாக ஒரு போக்குவரத்து நிறுவனம் தொடங்கும் வரை எனது இந்த பயணம் தொடரும்.
இவ்வாறு ஜோதிமணி தெரிவித்தார்.