ஜெயலலிதா நலம்.... ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ்: அப்பல்லோ மருத்துவர்கள்
சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும் அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஜெயலலிதா வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக செல்வதாக வெளியான தகவல்கள் தவறானவை என்றும் அப்பல்லோ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த வியாழக்கிழமை இரவு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
4-வது நாள் சிகிச்சை
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று 4-வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வழக்கமான உணவு
இந்நிலையில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், வழக்கமான உணவை அவர் உட்கொள்கிறார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஜெயலலிதா இன்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
குவியும் தொண்டர்கள்
ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்திற்கு அழைத்துச்செல்வதற்கான ஏற்பாடுகள் தாயராகி வருவதாகவும் கூறப்பட்டது. வழக்கம்போலவே இன்று காலையும் அமைச்சர்களும், அதிமுகவினரும் அப்பல்லோ வளாகத்திற்கு வந்து சென்றனர்.
ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ்
ஆனால் மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அப்பல்லோ மருத்துவர்கள், முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார். அவருக்கு மீண்டும் காய்ச்சல் வராமல் இருக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் வீடு திரும்புவார். ஜெயலலிதா வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக செல்கிறார் என்கிற தகவல் தவறானது என்றனர்.