ஜெ. மீளாத் துயில் கொள்ளும் எம்.ஜி.ஆர். சமாதி... வேகமாக தயார் செய்த பொதுப்பணித்துறை!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்வதற்காக எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே இடம் துரிதகதியில் ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னை: சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு அருகிலேயே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்வதற்கான வேலைகள் துரிதகதியில் ஏற்பாடு செய்யப்பட்டன.
உடல் நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நேற்றிரவு மரணமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து அவரது உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபல நடிகர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
இன்று மாலையே ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப் பட்டது. சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு அருகிலேயே ஜெயலலிதாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பின்னர் அங்கு நினைவிடம் அமைக்கப்பட இருக்கிறது.
இதற்காக கடலோர ஒழுங்கு முறை சட்டத்தில் இருந்து போதிய விலக்குப் பெற்று நினைவிடம் அமைக்கப்பட இருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
எம்.ஜி.ஆர் சமாதியின் அருகிலேயே இதற்கான இடத்தை மார்க் செய்த பொதுப்பணித் துறை அதிகாரிகள், அங்கு பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.
ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கிற்கு சில மணி நேரங்களே இருந்ததால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவசர அவசரமாக அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். மூத்த அதிகாரிகள் கண்காணிப்பில் இந்தப் பணிகள் நடைபெற்றது.
இது ஒருபுறம் இருக்க, ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவின் முகத்தை இறுதியாகப் பார்க்க இயலாத பொதுமக்கள், எப்படியும் அடக்கத்திற்கு முன் கடற்கரைச் சாலையில் பார்த்துவிட வேண்டும் என அங்கு குவிந்தனர்.
எனவே, பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.